"அரிசி மலை காணி" தொடர்பான வழக்கு


(அப்துல் சலாம் யாசீம்)

அரச சேவையாளர்களினால் பொது மக்களுக்கு அநீதி விளைவிக்கக் கூடாது என திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.


திருகோணமலை-புல்மோட்டை 
அரிசி மலை காணி தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்ட போதே இவ்வறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

புல்மோட்டை அரிசி மலை பகுதியில் குடியிருக்கின்ற ஏழு முஸ்லிம் பொதுமக்களினால் தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி எம். எம். ரிஸ்வான் முஹம்மட் அவர்களின் ஊடாக திருகோணமலை மேல் நீதிமன்றில் "எழுத்தானை" வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் அழைக்கப்பட்டபோது அரச உத்தியோகத்தர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் எதிர் மனுதாரராக குறிப்பிடப்பட்ட வன இலாக்கா திணைக்களம்,குச்சவெளி பிரதேச செயலாளர் மற்றும் தொல்பொருள் திணைக்களம் அத்துடன் சட்டமா அதிபர் ஆகியோர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கில் பாதிக்கப்பட்ட புல்மோட்டை அரிசி மலைப் பகுதியைச் சேர்ந்த ஏழு நபர்களுக்கும் குச்சவெளி பிரதேச செயலகத்தினால் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் தொல்பொருள் திணைக்களத்தினாளும்,நிலஅளவைத் திணைக்களத்தினாளும் நில அளவீடு செய்ய முற்பட்ட வேளையில் தங்களுக்கு எதிராக ஏற்பட்ட அநீதி தொடர்பாகவே இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.