சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்


ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக செயற்படும் முதல் பெண்ணாக அவுஸ்திரேலியாவின் க்ளையார் பொலசக் (Claire Polosak) வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

உலகக் கிண்ண இரண்டாம் தர கிரிக்கெட் தொடரில், ODI அந்தஸ்த்து பெற்ற நமிபியா மற்றும் ஓமான் அணிகளுக்கிடையிலான போட்டியில் அவர் நடுவராகப் பணியாற்றியுள்ளார்.

1988 ஆம் ஆண்டில் பிறந்த Claire Antonia Polosak, பெண்களுக்கான சர்வதேச இருபதுக்கு இருபது போட்டிகளில் நடுவராக செயற்பட்டுள்ளதுடன், 2017 ஆம் ஆண்டில் இடம்பெற்ற பெண்களுக்கான உலகக்கிண்ண போட்டியில், நான்கு பெண் நடுவர்களில் ஒருவராக ICC-இனால் பெயரிடப்பட்டார்.

எவ்வாறாயினும், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இந்த ஆண்டிற்கான ஆண்களுக்கான சர்வதேச ஒருநாள் போட்டிகளின் நடுவர் குழாத்தில் 31 வயதான Claire Polosak இடம்பிடித்துள்ளார்.

இதன் பிரகாரம், உலகக் கிண்ண இரண்டாம் தர கிரிக்கெட் தொடரில் 8 நடுவர்களில் ஒருவராக அவர் பெயரிடப்பட்டுள்ளார்.

இவர் ஒரு ஆசிரியர் என்பதும் குறிப்பிடத்தக்கது.