வரவு செலவுத் திட்ட தோல்விக்கான காரணம் என்ன?


வரவு செலவுத் திட்டத்தை தோல்வியடையச் செய்வதற்கு தேவையான முறையான ஒரு வேலைத்திட்டம் காணப்படவில்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
தனியார் வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் ஜனாதிபதியின் அமைச்சுக்களும் நிறுவனங்களும் பல உள்ளடங்கப்பட்டிருந்தன. ஜனாதிபதி நாட்டின் தலைவராகவும் கட்சியின் தலைவராகவும் இருப்பதனால், அவருக்கு விரோதமாக செயற்பட முடியாத ஒரு நிலைமை காணப்பட்டது. இதுதான் முக்கிய காரணம்.
அத்துடன், இந்த வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் சபையில் விவாதத்தில் கலந்துகொள்ளவில்லை.
நாடு தவறான பாதையில் செல்வதாக கண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக மாற்றி ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தினார். இருப்பினும், பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள முடியாமல் போனது.
நேற்றைய தினமும் அரசாங்கத்துக்கு 119 பெரும்பான்மை காணப்பட்டது. நாம் வாக்களிப்பதனால் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க முடியுமான நிலைமை காணப்படவில்லையெனவும் அவர் மேலும் கூறினார்.