ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் COME OR GO CHICAGO நிலை


ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரான தயாசிறி  ஜயசேகரவுக்கும், டிலான் பெரேரா எம்.பிக்குமிடையில் நேற்று (05) நாடாளுமன்றக்  கட்டத்தொகுதியில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் சொற்போர் உச்சத்தைதொட, ‘வெளியே  போ’ என தயாசிறி ஜயசேகர கடுந்தொனியில் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசின் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம்மீதான இறுதிவாக்கெடுப்பு நேற்று மாலை நடைபெற்றது.
இதன்போது எவ்வாறு வாக்களிப்பது என்பது  குறித்து முடிவெடுக்கமுடியாமல் நேற்று மதியம்வரை சுதந்திரக்கட்சி  திணறியது.நண்பகல் 12 மணியளவில் சு.க. உறுப்பினர்கள் சிலர், குழுஅறையில் கூடி ஆராய்ந்துள்ளனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட தயாசிறி,
” பட்ஜட்’டை நிறைவேற்றுவதற்குரிய பெரும்பான்மையை  ஐக்கிய  தேசியக் கட்சி கொண்டுள்ளது. அத்துடன், ஜனாதிபதி வசமும் நான்கு  அமைச்சுகள் இருக்கின்றன. எனவே, வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் இருப்பதே சிறந்த முடியாக அமையும். பட்ஜட்டை தோற்கடிக்கும் திட்டம் கூட்டு எதிரணியிடம்கூட இல்லை.” – என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு டிலான் பெரேராவும், எஸ்.பி. திஸாநாயக்கவும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். தயாசிறிமீது தனிப்பட்ட ரீதியில் சொற்கணைகளைத் தொடுக்க ஆரம்பித்தார் டிலான்.
இதனால், கடுப்பாகிய தயாசிறி, கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுபட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் வெளியேறலாம்.” என்று கட்டளை பிறப்பித்தார்.
” நான் எதிர்த்துதான் வாக்களிப்பேன். எதையாவது செய்யுங்கள்” என டிலானும் பதிலடி கொடுத்துவிட்டு வெளியேறினார் என கூறப்படுகின்றது.