அந்தோனியார் தேவாலயத்தில் அஞ்சலி செலுத்திய, மோடி


இலங்கைக்கு இன்று வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உயிர்த்த ஞாயிறு தினமன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேரடியாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்கு மோடி சென்றார்.
தாக்குதலின் பாதிப்புக்களை அங்கு நின்ற கொழும்பு மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் கேட்டறிந்த மோடி, தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்.
மோடியின் வருகையையொட்டி கொச்சிக்கடைப் பகுதியில் முப்படையினரின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.