பாகிஸ்தான் வெற்றி பெற்றது,தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி


லண்டன் :
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் 30-வது லீக் ஆட்டம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமது பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 308 ரன் குவித்தது.
பின்னர் 309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக அம்லாவும், டி காக்கும் ஆடினர். அம்லா 2 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த டு பிளிஸ்சிஸ், டி காக்குடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் பொறுப்புடன் ஆடி ரன் குவித்தனர். டி காக் 47 ரன் இருக்கும்போது ஆட்டம் இழந்து அதிர்ச்சி கொடுத்தார்.
ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், டு பிளிஸ்சிஸ் அரை சதம் அடித்து அசத்தினார். அரை சதம் அடித்த சிறிது நேரத்தில் டு பிளிஸ்சிஸ் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதைத்தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்ததால் இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 259 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.