இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர்,தற்கொலை


இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகர் சென்னையில் தற்கொலை செய்துகொண்டு இறந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரோடு பயணித்த சக கிரிக்கெட் வீரர்கள் விவிஎஸ் லக்‌ஷ்மன், அனில் கும்பளே, ஸ்ரீகாந்த் ஆகியோரும், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களும் வி.பி.சந்திரசேகருக்கு தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த வி.பி.சந்திரசேகர்?
  • 1988ஆம் ஆண்டில் சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணி சார்பில் களமிறங்கிய வி.பி.சந்திரசேகர், இடது கை பேட்ஸ்மேன் ஆவார். அனைவராலும் வி.பி. என்று செல்லமாக அழைக்கப்படும் இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.
  • 1987-88ல் தமிழக அணி இரண்டாவது முறையாக ரஞ்சி கோப்பை வென்றதில் முக்கிய பங்காற்றியவர் வி.பி. இரானி கோப்பை போட்டியில், அதிரடியாக ஆடி 56 பந்துகளில் 100 ரன்களை எடுத்து பெருமையை பெற்றவர்.
வி.பி.சந்திரசேகர்
  • இந்தியாவுக்காக 7 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடிய அவர், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 53 ரன்கள் எடுத்தார்.
  • உள்ளூர் போட்டிகளில் அதிகம் கவனம் செலுத்திய சந்திரசேகர், 81 போட்டிகளில் கலந்து கொண்டு 4,999 ரன்களை ஸ்கோர் செய்தார்.
  • சில சீஸன்களுக்கு முன்புவரை, உள்ளூர் கிரிக்கெட்டில் அதிவேக சதம் எடுத்த வீரர் என்ற பெருமையை தக்க வைத்திருந்தார்.
  • ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி அறிமுகமான போது, அணியின் மேலாளராக இருந்த சந்திரசேகர், மகேந்திர சிங் தோனியை அணிக்கு தேர்வு செய்ததில் முக்கிய பங்காற்றியவர்.
  • இந்திய அணிக்கு கிரேக் சாப்பல் பயிற்சியாளராக இருந்த போது, கிரிக்கெட் தேர்வு குழுவில் உறுப்பினராகவும் இருந்தார். அதன்பிறகு, கிரிக்கெட் வர்ணனையில் கவனம் செலுத்திய அவரது, துடுக்கான ரசனை மிகுந்த பேச்சுக்கு ரசிர்கர்கள் ஏராளம்.
வி.பி.சந்திரசேகர்
  • தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்பட்டுவரும் டி.என்.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளராக வி.பி.சந்திரசேகர் இருந்துவந்தார்.
  • சென்னையில் வி.பி. அகடாமி என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் சந்திரசேகர்.
  • ஸ்ரீகாந்த், ராகுல் டிராவிட் ஆகியோரின் நெருங்கிய நண்பரான இவர் தனித்துவமான ஒரு அதிரடி கிரிக்கெட் வீரர்.