பாவங்களின் பரிகாரம்-தான தர்மங்கள் #Islam #இஸ்லாம்



பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்காகவே தான, தர்மங்கள் என்ற இரண்டு நிலைகளை இஸ்லாம் வலியுறுத்திச் சொல்கிறது. ஏழை-பணக்காரன் என்பது முதல் வாழ்க்கையின் பல்வேறு தரப்பிலும் மனிதர்களிடம் வித்தியாசங்கள் காணப்படுகின்றன. அந்த வேறுபாடுகளை களைவதற்கு, தான-தர்மங்கள் என்ற இரண்டையும் ‘ஜகாத்’, ‘ஸதகா’ என்ற சொற்களின் மூலம் அடையாளப்படுத்துகிறது இஸ்லாம்.

ஒருவன் தன் வாழ்வில் சம்பாதிக்கும் செல்வங்களில் தன் தேவைக்குப்போக மீதி இருக்கும் தொகையில் 2½ சதவீதம் பணத்தை தானமாக கொடுத்து விட வேண்டும். ‘ஜகாத்’ என்ற இந்த தானத்தை ஒவ்வொரு இஸ்லாமியர்களும் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.

செல்வங்கள் என்று சொல்லும் போது பணம், நகைகள், அசையா, அசையும் சொத்துக்கள் என்று எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒன்றாக கருதப்படும். உதாரணமாக, ஒருவரிடம் ஒரு ஆண்டில் 80 கிராம் வெள்ளி அல்லது அதற்கு இணையான பணம், இதில் எது மிஞ்சுகிறதோ அப்போது அவர் மீது ‘ஜகாத்’ கடமையாகி விடும்.

‘ஜகாத்’ என்ற தானத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது, அதனை யாருக்கு கொடுக்க வேண்டும்?, எப்படி கொடுக்க வேண்டும், என்பதை அல்லாஹ் திருக்குர்ஆனில் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளான்.

‘(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின்பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (திருக்குர்ஆன் 9:60)

இவர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு கொடுக்கப்படுவது ‘ஸதகா’ என்ற உபரி தர்மத்தைச் சாரும். ‘ஜகாத்’ கட்டாய கடமை, ‘ஸதகா’ நினைத்தால் செய்யக்கூடிய தர்மம். இந்த இரண்டிற்கும் வரையறுக்கப்பட்ட நன்மைகளும் வெவ்வேறானது.