விபத்தில் இளைஞர் ஒருவர் பலி


(க.கிஷாந்தன்)

 

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில் இன்று (10.06.2020) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

 

அட்டன் பகுதியை சேர்ந்த 28 வயதான மனோகரன் கணேஷ் என்பவரே மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 

நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்துகொண்டு அட்டன் நோக்கி பயணிக்கையிலேயே அவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

 

கொட்டகலை நகரிலிருந்து லொக்கீல் நோக்கி பயணிப்பதற்கு தயாரான ஆட்டோவொன்றில், வேகக்கட்டுப்பாட்டை இழந்து அவர் செலுத்திய மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்து அவர் வீசப்பட்டுள்ளார். வீதிக்கு அருகாமையில் இருந்த 'காட் கல்' எனப்படுகின்ற எல்லை நிர்ணய கல்லில் தலைபட்டதாலேயே உயிரிழந்தார். அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து வீசுபடும் போது தலைக்கவசமும் கழன்றுள்ளது.

 

படுகாயமடைந்த அவர் கொட்டகலை வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்படும் வழியில் உயிரிழந்தார் என்றும், சடலம் பிரேத பரிசோதனைக்காக கொட்டகலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.