மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் நடப்பது என்ன?


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் கிட்டத்தட்ட 67 க்கும் மேற்பட்ட  வீடுகள் எந்தவித காரணங்களுமின்றி பல வருடங்களாக பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருப்பதாகவும்  இவற்றுக்கான பயனாளிகள் நேர்முகப் பரீட்சையின் மூலம் அரசாங்க அதிபரினால் தெரிவு செய்யப்பட்டு பயனாளிகளின் பட்டியல் தயார் நிலையில் உள்ளபோதிலும் இன்னும் பகிர்ந்தளிக்கப்படாமல் உள்ளதாகவும் தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக மாற்ற சில தரப்பினர் மாற்ற முயன்று வருவதாக பொதுமக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.


குறித்த வீட்டுத்திட்டம் தொடர்பில் மக்கள் தெரிவித்ததாவது

 மருதமுனை 65 மீட்டர் சுனாமி வீட்டுத்திட்டத்தில் எஞ்சியிருக்கும் வீடுகள்  பல வருட காலமாக எவருக்கும் வழங்கப்படாமல் பாழடைந்து காணப்படுகின்றன  இனியும் தாமதியாமல் இவ்வீடுகளை பொருத்தமான பயனாளிகளுக்கு கையளிப்பதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  இதற்கு முன்னர் இவ்வீடுகளை பகிர்ந்தளிப்பதற்காக பயனாளிகள் பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட்டதாகவும் அப்பயனாளிகள் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாகவும் அதனால் இந்நடவடிக்கை தடைப்பட்டதாகவும் அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தெரிவித்திருந்தார்.எனவே மீண்டும்  மறுபரிசீலனை செய்தாவது  பயனாளிகளின் தெரிவினை உடனடியாக செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .

  சுனாமி ஏற்பட்டு 16 வருடங்கள் கடந்து விட்ட போதிலும் அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கென அமைக்கப்பட்ட இவ்வீட்டுத்தொகுதி இதுவரை உரியவர்களிடம் கையளிக்கப்படாமையினால் குறித்த வீடுகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் இடம்பெறுவது  தொடர்கதையாகவே உள்ளது.இது தவிர வீட்டு உபகரணங்கள் உடைக்கப்பட்டு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.வீடுகளுக்கு நடுவில் காடுமண்டிக்காணப்படுவதுடன் பாழடைந்து வருகின்றது.தேர்தல் காலங்கள் மாத்திரம் வந்தால் இவ்வீட்டு பிரச்சினை சகல தரப்பினாலும் பேசப்படும் பொருளாகவே உள்ளதே தவிர ஒழுங்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை.
தொடர்ந்த குறித்த வீட்டின் கதவுகள் யன்னல்கள் இனந்தெரியாதோரினால் உடைத்து எடுத்துச்செல்லப்படுகின்றன.எனவே மருதமுனை மேட்டுவட்டை 65 முpற்றர்  வீட்டுத்திட்ட வீடுகளை வழங்க ஜனாதிபதி் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மற்றுமொருவர்  கருத்து தெரிவிக்கையில்

கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின் அரசினால் கட்டிமுடிக்கப்பட்ட குறித்த இவ்வீடுகளில் ஒரு தொகுதி வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு மீதியாக உள்ள   வீடுகளையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டக்கொள்கின்றேன்.மருதமுனை மேட்டுவட்டையில்  65 மீற்றருக்கு உட்பட்டோருக்கென கட்டப்பட்ட வீடுகளில் பயனாளிகளின் பகிர்ந்தளிப்புப் போக எஞ்சிய 67 வீடுகள் ஆகியன இதுவரை பகிர்ந்தளிக்கப்படாமல் இருப்பது துரதிஷ்டவசமான மேற்படி வீடுகளை வழங்குவதில் மிக நீண்ட காலமாக இழுத்தடிப்புகள் இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறான நிலையில் இங்குள்ள வீடுகளில் உள்ள பொருட்கள் அவ்வப்போது இனந்தெரியாதோரால்  சேதமாக்கப்பட்டு வாருவதாகவும் சில பொருட்கள் காணாமல் போவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் இன்னும் தாமதமாக்கப்படும் பட்சத்தில் இவ்வீடுகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாகவும் தாமதமின்றி இவ் வீடுகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்கின்றேன் என்றார்.குறித்த வீட்டுத்திட்டங்களுக்கு அருகே உள்ள நீர் வடிந்தோடும் கால்வாய்கள் மோசமாக உடைந்து காணப்படுகின்றது.இதனால் கழிவு நீர் தேங்கி நுளம்பு பெருக்கம் அதிகரித்துள்ளது.வீட்டு கழிவு நீரை மழைநீர் வடிந்தோடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகான்களில்  கட்டட வேலைகளை செய்வதற்காக வடிகான்கள் மேல் கல், மண் போன்ற பொருட்களை குவித்ததன் காரணமாக அவை வடிகான்களில் அடைபட்டு தேங்கி கிடக்கின்றன.

இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகள் காரணமாகத்தான் டெங்கின் தாக்கம் குறித்த பகுதியில் அதிகரித்து காணப்படுகின்றது.


அத்தோடு மேலும் தாமதப்படுத்தாமல் உரிய பயனாளிகளுக்கு உடனடியாக   வழங்குவதற்கு விசேட செயலணி அமைத்து  நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கல்முனை மாநகர மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 அம்பாறை மாவட்டச் செயலகத்தில் அண்மையில்  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்ற வேளை இச்செயலணி ஒன்றினை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.பொருத்தமான பயனாளிகளைத் தேர்வு செய்துஇ இவ்வீடுகளை கையளிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அடுத்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கு முன்னதாக முன்னெடுக்கும் பொருட்டுஇ விசேட செயலணியொன்றை அமைப்பது என தீர்மானிக்கப்பட்டதாகவும் மேயர் றகீப் குறிப்பிட்டு இருந்தார்.


இவ்வாறு குறித்த பிரச்சினை நீண்டு செல்வதற்கும்  வீடுகள் இவ்வாறு இழுத்தடிப்புச் செய்யப்படுவதற்கு பாதிக்கப்பட்ட மக்களிடம் விட்டுக்கொடுப்பு இல்லாமைஇ அரச அதிகாரிகளின் அசமந்தப் போக்கு என்பன உதிரிக்காரணிகளாக இருந்த போதிலும் பிரதேச மற்றும் தேசிய அரசியல்வாதிகளின் கையாலாகாத தனமும் மக்களை ஏமாற்ற நினைத்தமையுமே இன்னுமொரு காரணம் எனலாம். தொடராக வந்த ஒவ்வொரு தேர்தல்களிலும் இதனை வைத்து அரசியல் வியாபாரம் செய்யத் துணிந்தவர்கள் அதனை ஒப்படைக்க வேண்டும் என்பதில் அதீத அக்கறை காட்டவில்லை. ஒரு அரசியல்வாதி முன்னெடுப்பதை இன்னுமொருவர் தடுக்கின்ற கேவல அரசியல் வக்குரோத்தும் இதன் பிந்துகைக்கான காரணமே. பல தேர்தல்கள் வந்த போதிலும் உரிமைகளுக்காக வாக்களிக்கின்றோம் எனக் கூறிய பெரும்பான்மை மக்கள் வாழுவதற்கான வீடும் எமது உரிமை என்பதை மறந்தே விட்டனர்.

எஞ்சியுள்ள வீடுகள் யார் யாருக்குக் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்கப்பால் அதனைப் பெறப்போகின்றவர்கள் ஏழைகள். அவர்கள் இன்று அவ்வீடுகளைப் பெற்றால் அதனைப் லட்சக்கணக்கான ரூபா  செலவு செய்தே அதில் குடியேற வேண்டும். காரணம் இன்று அவ்வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டுள்ளன. ஜன்னல் கண்ணாடிகள் கழற்றப்பட்டும் சேதமாக்கப்பட்டும் உள்ளன. மிருகங்களின் சரணாலயமாகவும் போதைவஸ்துக்காரர்களின் மறைவிடமாகவும் அவ்வீடுகள் மாறியுள்ளன. இதற்கெல்லாம் காரணம் அரசியல் வாதிகளின் பொடுபோக்குத்தன்மை ஒருபுறமிருக்க அரச அதிகாரிகளின் கவனமின்மையே பிறிதொரு காரணமாகும்  

வீடுகள் இல்லாமல் அத்துமீறி குடியேறி வசித்து வருகின்ற சில குடும்பங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அதிகாரிகள் தங்களின் கீழுள்ள வீட்டுத்திட்டத்தைப்பாதுகாக்காமல் பாழடைந்து சேதமேற்படவும் காரணமாக இருந்துள்ளனர். இவ்வீடுளை மீண்டும் ஒப்படைக்கப்படும் நிலை வந்தால் அதற்கான புனர்நிருமாணப்பொறுப்பை அரசே பொறுப்பேற்க வேண்டும்.

எது எவ்வாறாயினும் மருதமுனை 65 மீற்றருக்கு உட்பட்டோரின் வீட்டுப்பிரச்சினை சுனாமியின் வடுக்களை மறக்காமல் இருப்பதற்கான அருங்காட்சிப் பொருளாக மாறியுள்ளதென்றே கூறலாம்.