வடக்கிற்கான விசேட தொற்றுநோய் மருத்துவமனை


 


வடக்கிற்கான விசேட தொற்றுநோய் மருத்துவமனை (Infectious Disease Hospital for Northern Province) இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கிருஸ்ணபுரம் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட குறித்த மருத்துவமனையை திறந்து வைக்கும் நிகழ்வு பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர்
வைத்தியர் என். சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன்,  வடக்கு மாகாண சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர்  அ. கேதீஸ்வரன், பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் திலீபன், யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி, உலக வங்கியின் இலங்கைக்கான திட்டப்பணிப்பாளர் வைத்தியர் ஜெயசுந்தர பண்டார, வவுனியா மாவட்ட வைத்தியாசலையின் பணிப்பாளர் வைத்தியர் நந்தகுமார், இராணுவ அதிகாரிகள், கிளிநொச்சி சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் அசங்க பண்டாரகுணதிலக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ராகுலன், கிளிநொச்சி  பிராந்திய சுகாதார திணைக்கள  திட்டமிடல் பொறுப்பு வைத்தியர் சுகந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

குறித்த வைத்தியசாலை விளையாட்டு மைதானம்,  பிரார்த்தனை மண்டபம், நூலகம் உள்ளக விளையாட்டரங்கம் திறந்த வெளித் திரையரங்கம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது 200 நோயாளர்கள் ஒரே தடவையில் தங்கி சிகிச்சை பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இவ் வைத்தியசாலையானது எதிர்காலத்தில் மேலும் விரிவாக்கப்பட்டு அதிவிசேட தொற்றுநோயியல் ஆய்வுகூடங்கள் மற்றும் சிறப்பு வசதிகளுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் என். சரவணபவன் தெரிவித்துள்ளார்.

தேசிய வைத்தியசாலைகளின் தரத்திற்கு பிரதேசத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையினை மேம்படுத்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் எண்ணக்கருவிற்கு அமைய மத்திய சுகாதார அமைச்சினால் குறித்த வைத்தியசாலை எதிர்காலத்தில் மேலும் விரிவு படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கிற்கான விசேட தொற்றுநோய் மருத்துவமனை கிளிநொச்சியில் திறந்து வைப்பு! 1