செய்தி சேகரிக்க அனுமதிக்கவில்லை


 


நீர்கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

ஊடகவியலாளர்களுக்கு செயதி சேகரிக்க அனுமதியில்லை: சிலர் திரும்பிச் சென்றனர்.


நீர்கொழும்பு மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் 13 மேலதிக வாக்குகளால்  இன்று  புதன்கிழமை (9) நிறைவேற்றப்பட்டது.

நீர்கொழும்பு மேயர் தயான் லான்ஸாவின் தலைமையில் நடைபெற்ற வரவு செலவுத் திட்ட  விவாதத்தின் பின்னர் வாக்களிப்பு இடம்பெற்றபோது,     27 வாக்குகள் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாகவும். 14 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. இதன் அடிப்படையில் 13 மேலதிக வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.

 மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான ஐக்கிய தேசியக் கட்சி நீர்கொழும்பு அமைப்பாளர் கிஹான் பென்ஞமின்,  முன்னாள் எதிர்கட்சித் தலைவர் ரவி ஜீவானந்த, முஹம்த் நஸ்மியார், மார்க் சுஜித், மனோஜ், கோமஸ் ஆகியோர் இன்று  வரவு செலவுத்திட்ட விவாதத்திற்கு சமூகமளிக்கவில்லை.

மாநகர சபையின் எதிர் கட்சித் தலைவர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான ரொயிஸ் பெர்னாந்து, சங்கீத்,  காஞ்சனா வீரசிங்க சில்வா , கெலிசன் ஜயகொடி, ஸ்ரீ நிக்க, நிவ்மன், நாமல் வேவல் தெனிய, சுமித் , ரொசான்,  பிரதீப் சாமர பெர்னாந்து ஆகியோர் எதிராக வாக்களித்தனர். 

அத்துடன் ஜே.வி.பி உறுப்பினர்கள் மூவரும் ஐக்கிய தேசிய  சுதந்திர முன்னணி உறுப்பினர் நந்த சுலோச்சன  பெரேரா ஆகியோரும் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.

இதேவேளை, ஊடகவியலாளர்களுக்கு சபை அமர்வை செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதன் காரணமாக அச்சு இலத்திரனியல் ஊடகவியலாளர்கள் மாநகர சபையின் முன்றலில் காதிருக்க வேண்டி ஏற்பட்டது. இதன் காரணமாக  சில ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்காமல் திரும்பிச் சென்றனர்.