மாளிகைக்காடு கிழக்கு-மறுஅறிவித்தல் வரை பூட்டு


 


பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්)


அம்பாறை காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்கு பகுதி  மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மறுஅறிவித்தல் வரை பாதைகள் மூடப்பட்டுள்ளது.

காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, காரைதீவுப் பிரதேசத்துக்குட்பட்ட மாளிகைக்காடு கிழக்குப் பிரதேசம் இன்று (14) பிற்பகல் 2 மணியளவில் முற்றாக முடக்கப்பட்டது.

இன்று  கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர்கள்  நடமாடிய பகுதிகளை உள்ளடக்கியே இக்கட்டுப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் திருமதி  ஜீவராணி சிவசுப்ரமணியம்  தெரிவித்தார்.

மேலும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரியின் நடவடிக்கைக்கு அமைய காரைதீவு பிரதேச சபை  தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் வீதிகளுக்கு குறுக்காக கயிறுகளில் எச்சரிக்கை பதாதை போடப்பட்டு   மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பி.சி.ஆர் பரிசோதனைகளும் இடம்பெற்று வருகின்றன.

காரைதீவு  பிரதேச சபை  சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை என்பன   தற்காலிகமாக உடன் அமுலுக்கு வரும்வகையில் இப்பிரதேசத்திற்கு வெளியிடங்களில் இருந்து மாளிகைக்காடு கிழக்கு நோக்கி வருபவர்களை தடுப்பதற்காக காலவரையறையின்றி மூடப்படுவதாக காரைதீவு சுகாததார வைத்திய அதிகாரி குறிப்பிட்டார்.

 
ஏற்கனவே கெரோனா நோயில் பீடிக்கப்பட்டவரிடம் பெறப்பட்ட தகவல்களின் பிரகாரம் அவர்  இங்குள்ள  பொதுச் சந்தையில் நடமாடியதைத் தொடர்ந்தே இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் சுகாதார ஆலோசனை பெறப்பட்டு மீளத் திறப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.இப்பிரதேசத்திலிருந்து யாரும் வெளியேறவோ, உள்நுழையவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அச்சோதனைகள் முடிவுற்று, மக்கள் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்துமுடிந்த பிற்பாடு, இப்பிரதேசம் முற்றாக முடக்கப்பட்டது.இதன்படி, மாளிகைக்காடு மீன்வாடிப் பிரதேசம் தொடக்கம் கரைச்சை வரைக்குமான பிரதேசம் முற்றாகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என  காரைதீவு பிரதேச சபை  தவிசாளர்    தெரிவித்தார். 

இந் நிலையில்  காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி , காரைதீவு பிரதேச சபை  தவிசாளர் ,  உபதவிசாளர், மற்றும்  உறுப்பினர்கள்,இதன் போது அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருவதுடன்    அப்பகுதியில் உள்ள பொது இடங்கள்  சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


இன்று அதிகாலை கிடைக்கப்பெற்ற கொரோனா தொற்றின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்த காரணத்தால் இப்பிரதேசத்தில் சுகாதாரத் துறையினரால் காலை 100க்கும் மேற்பட்ட அன்ரிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.