திருக்கதவு திறக்கும் நிகழ்வு



 (


வி.சுகிர்தகுமார்  


  கண்ணகி வழிபாட்டிற்கு பிரசித்தி பெற்ற இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகரில் குடிகொண்டுள்ள  கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி பூரணை திருக்குளிர்த்தி சடங்கின் திருக்கதவு திறக்கும் நிகழ்வு பெருந்திரளான மக்களின் அரோகரா வேண்டுதலின் மத்தியில் இன்று இடம்பெற்றது.
 கண்ணகி வரலாற்றுடன் தொடர்புடைய கண்டிய மன்னரின் மானியம் பெற்றதும் பொற்புறா வந்த காவியம் பாடப்பட்டதுமான இவ்வாலயத்தின் திருக்குளிர்ச்சி; திருக்கதவு திறக்கும் வழிபாடுகளுடன் ஆரம்பமானது.
தொடர்ந்து 12ஆம் திகதி வரை நடைபெறும் விசேட அபிசேக மூன்றுகாலப்பூஜைகளுடன் இடம்பெற்று 13ஆம் திகதி இரவு இடம்பெறும் கல்யாணக்கால் நடும் நிகழ்வுடனும் நேற்று 14ஆம் திகதி இடம்பெறும்  திருக்குளிர்த்தி மற்றும் பக்தர்களின் நேர்கடன் பொங்கல் 15 நடைபெறும் கவடாப்பிட்டி பிள்ளையார் ஆலய பொங்கல் மற்றும் ஜயனார்,வைரவர், நாகேஸ்வரர் பூஜையுடனும் நிறைவுறும்.
இன்று  காலை பனங்காடு கேணிக்கரை பிள்ளையார் ஆலய தரிசனத்துடன் அக்கரைப்பற்று பிரதேச இந்து ஆலயங்களின் பரிபாலன சபை உறுப்பினர்களின் வருகையினை தொடர்ந்து வண்ணக்கர் க.கார்த்திகேசு தலைமையில் பாசுபதேசுரர் தேவஸ்தான தரிசனம் செய்து பூஜா திரவியங்களுடன் அம்மன் பதி அடைந்தது.
ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜைகளை தொடர்ந்து நண்பகல் 12 மணியளவில் திருக்கதவு திறக்கப்பட்டது.
ஆலய தலைவர் வண்ணக்கர் க.கார்த்திகேசு தலைமையில் இடம்பெறும் திருக்குளிர்ச்சி வழிபாடுகளை ஆலய பூசகர் கு.ரவீந்திரநாதன் தலைமையிலான பூசகர்கள் நடாத்தி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.