சாதனை மாணவர்கள் கௌரவிப்பு




 


(காரைதீவு  நிருபர் சகா)


 சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய வரலாற்றில் முதல் தடவையாக க.பொ.த. சா.தரப் பரீட்சையில் சாதனை படைத்த 49 மாணவர்களும், தேசிய ரீதியில் சாதனை படைத்த மூன்று மாணவிகளும் கௌரவிக்கப்பட்டார்கள்.

 இந்த கௌரவிப்பு விழா நேற்று முன்தினம்(5) இடம்பெற்ற கல்லூரியின் காலை ஆராதனை நிகழ்வின்போது நடைபெற்றது.

கல்லூரி அதிபர் நஜீபா ஏ ரஹீம் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை வலய கல்வி பணிமனையின் பிரதி கல்விப் பணிப்பாளர் அப்துல் மஜீத் கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம் ஏ சபூர் தம்பி உதவி கல்வி பணிப்பாளர் வீ.ரி. சகாதேவராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.

கடந்த ஆண்டு இடம் பெற்ற சாதாரண தரப் பரீட்சையில் 30 மாணவர்கள் 9 ஏ சிக்கிகளையும் ஏனைய பத்தொன்பது மாணவர்கள் 8 ஏ, 7 ஏ சித்திகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்திருந்தார்கள். அவர்களுடன் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மூன்று மாணவிகளும் அங்கு கௌரவிக்கப்பட்டார்கள்.
 இந்நிகழ்வில் பெற்றோர்களும் பெருமளவில் கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தினார்கள்.

 3500 மாணவர்கள் முன்னிலையில் இந்த 52 சாதனை மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.