பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர்,கைது




 


பாறுக் ஷிஹான்

பல கடவுச்சீட்டுக்களை தன்வசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான அரச பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நபர் ஒருவர்  பல கடவுச்சீட்டுக்களை நபர்களிடம் பெற்று வருவதாக  பொலிஸ் விசேட பிரிவு பொறுப்பதிகாரிக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்றிருந்தது.

வியாழக்கிழமை(23)   இதற்கமைய சம்பவ இடத்திற்கு  கல்முனை தலைமையக பொலிஸார் வருகை தந்து  சுற்றி வளைத்து தேடுதல் ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்டம் ஆரையம்பதி பகுதியை சேர்ந்த 51 வயது மதிக்கத்தக்க மைக்கல் மணிமேகலன் என்பவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என கூறி சிலரிடம் பெற்றுக்கொண்ட  கடவுச்சீட்டுக்களுடன் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.குறித்த நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்  வங்கி கணக்கின் ஊடாக பலரிடம் பணக்கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பொறுப்பதிகாரியும்  பிரதம பொலிஸ் பரிசோதகருமான  அலியார் றபீக் தலைமையில் பொலிஸ் குழுவினர் இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் வாக்குமூலங்களை பெற்றுள்ளதுடன்   கைதான சந்தேக  நபர் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக அனுப்புகின்ற  வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரா அல்லது இடை தரகரா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.