சாய்ந்தமருது கடலரிப்பை கட்டுப்படுத்தும் பணிகள்




 


சாய்ந்தமருது கடலரிப்பை கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த ஹரீஸ் எம். பியுடனான சந்திப்பில் மேலதிக பணிப்பாளர் நாயகம் உறுதியளிப்பு !!


நூருல் ஹுதா உமர் 


சாய்ந்தமருது பிரதேசத்தின் கடலரிப்பை கட்டுப்படுத்த 07 தடுப்பணைகள் அமைக்கும் பணிகளுக்கான விலைமனு கோரும் நடவடிக்கைகள் முற்றுப்பெற்று நாளை விலைமனுக்கள் திறக்கப்பட்டு அடுத்த சில நாட்களில் பொருத்தமான ஒப்பந்தக்காரர்களை கொண்டு கட்டுமான நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாகவும், ஒரு வாரத்தில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்க உள்ளதாக கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூல வள முகாமை திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் திருமதி எல்.டி .ரூனஹே தெரிவித்தார். 


அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனை கரையோர பிரதேசங்கள் கடலரிப்புக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் இருக்கிறது. இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுத்து கரையோரத்தை பாதுகாக்கும் அவசியம் தொடர்பில் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகத்திற்கும், பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸுக்குமிடையிலான சந்திப்பு இன்று கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமை திணைக்களத்தில் இடம்பெற்றது.


இதன்போது நாளுக்கு நாள் கரையோர பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் காணொளி மற்றும் புகைப்படங்களை கொண்டு திணைக்கள பணிப்பாளர் நாயகத்திற்கு விளக்கிய பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ், கரையோர பிரதேசம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள விடயம் தொடர்பில் முழுமையாக விளக்கினார்.


நிலைமைகளை கேட்டறிந்த கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகம் அண்மையில் பாராளுமன்ற கட்டிட தொகுதியில்  எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில்  கடலரிப்பை காட்டுப்படுத்த அவசர நடவடிக்கை எடுப்பதாக பாராளுமன்ற உறுப்பினருக்கு உறுதியளித்தார்.


இந்த கலந்துரையாடலில் கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள உயர் அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.