அங்குரார்ப்பணம்




 


(வி.ரி. சகாதேவராஜா)


ஈ.கல்வி அமைப்பின் செயற்பாடுகள் பட்டிருப்பு வலயத்தில்  அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கென e- kalvi Charity Fund Inc அமைப்பின் செயலாளர் இளங்கோ வினாசித்தம்பி        பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனைக்கு நேற்று முன்தினம் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

அவர் பட்டிருப்பு வலயக்கல்வி பணிமனையை மையமாகக் கொண்டு இயங்கும் e- kalvi யின் zoom வகுப்புகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

இந் நிகழ்வானது பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளர்  எஸ்.சிறீதரன் தலைமையில் இடம் பெற்றது.

இந் நிகழ்வில் e- kalvi அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளரும்  ஹோலிக்குறோஸ் மகாவித்தியாலயத்தின் அதிபருமான அருட்சகோதரி சிறிய புஸ்பமும் இணைந்திருந்தார்.

 வலயத்தின் அதிபர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சிறீதரன், ஈ- கல்வி அமைப்பின் செயலாளரால் கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வைத் தொடர்ந்து கல்வி உத்தியோகத்தர்களுடன் செயற்கை நுண்ணறிவின் ( AI) வளர்ச்சிக்கு துணை செய்யும் ஆர்டுயீனோ ( Arduino) பற்றி கல்வித் திணைக்களத்துடன் இணைந்து எவ்வாறு ஆசிரியர்களுக்கு எவ்வாறு பயிற்சி அளிக்க முடியும் என ஆராயப்பட்டது. மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளை நோக்கி வழிநடாத்த  தொழில்நுட்பம் எவ்வளவு அவசியம் எனவும் கலந்துரையாடப்பட்டது.

 மேலும் தரம் 5, 10, 11  மாணவர்களின் zoom வகுப்புகள், மாதிரிப் பரீட்சை பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

e kalvi யானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள், விரிவுரையாளர்களினால் அவுஸ்திரேலியாவில் ஆரம்பிக்கப்பட்டு இலங்கையில் அதிகஷ்ட பிரதேச, வளங்கள் குறைந்த பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கைகொடுத்து வரும் ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.