கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்,போராட்டம்




 


( வி.ரி.சகாதேவராஜா)


 கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு நீதி கோரி கல்முனையில் இன்று (28) வியாழக்கிழமை நான்காவது நாளாக பொதுமக்கள் போராட்டம் தொடர்கிறது.

 பெருமளவில் பொதுமக்கள் அடையாள அமைதிப் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் கடந்த மூன்று தினங்களாக எந்த ஒரு தமிழ் அரசியல் வாதியும் தங்களை பார்க்க வரவில்லை என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நாம் இதற்குத் தானா வாக்களிப்பது? எங்களுக்கு உரிமை பிரச்சினை ஏற்படுகின்றபோது இப்படி இவர்கள் பாராமுகமாக இருப்பது வேதனையையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது என்று மக்கள் மேலும் தெரிவித்தார்.


         அரச சேவையை பெறும் தங்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் இனவாத அதிகார அத்துமீறலுக்கு அரசு இடமளிக்ககூடாது இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளருக்கும் இனவாத அரசியல்வாதிகளுக்கும் தங்கள் கண்டனங்களை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.   

     கல்முனை வடக்கு பிரதேச தமிழ் மக்கள் அரச சேவைகளை பெறும் அடிப்படடை உரிமைகள் தொடர்ச்சியாக திட்டமிடப்பட்டு மாற்றின அரசியல்வாதிகளால்  பறிக்கப்பட்டு வருகின்றமை நாடறிந்த விடயம்

     கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் 30 வருடங்களாக தடுக்கப்பட்டு வருவதுடன் அண்மைக்காலமாக இருக்கும் அதிகாரங்களும் பறிக்கப்பட்டும் வருகின்றன.

     பறிக்கப்பட்ட அடிப்படை உரிமைகளை பெறுவதற்கும் இயங்கிக் கொண்டிருக்கின்ற கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அரச அதிகாரங்களை பெற்று மக்களுக்கான அரச சேவையை பெறுவதற்கு முடியாமல் கடந்த 30 வருடங்களாக தவித்துக் கொண்டிருக்கும்  இப் பிரதேச மக்கள்  அமைதிப்போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். நான்காவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது. பெருமளவான பொது மக்கள் பங்குபற்றி வருகின்றனர். 

    அரசியல்வாதிகளே அரச அதிகாரிகளே அமைச்சின் செயலாளரே உங்கள் பதில் என்ன?

    ஆண்களும் பெண்களுமாக பிரதேச செயலத்தின் முன்னால் அமர்ந்து அமைதியான முறையில் முன்னெடுத்து வருகிறார்கள்.