அக்கரைப்பற்றில் அகப்பட்ட. திருடன் பொலிசாரிடம். ஒப்படைப்பு




(வி.சுகிர்தகுமார்)     


 அக்கரைப்பற்று 8ஆம் பிரிவில் இன்று (10)அதிகாலை நேரத்தில் அகப்பட்ட திருடனை பொதுமக்கள் நையப்புடைந்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
குறித்த திருடனும் அவனது நண்பர்களும் இணைந்து நேற்றிரவு (09) முதல் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பகுதிகளில் பல இடங்களில் திருட முயற்சித்துள்ள நிலையில் ஒருவன் மாத்திரம் வசமாக மாட்டிக்கொண்டான்.
குறித்த திருடன் வீட்டில் உள்ளவர்களின் நடமாட்டத்தை அவதானித்து வீட்டிற்குள் புகுந்து அறை ஒன்றினுள் ஒளிந்திருக்கின்றான்.
அவ்வறையில் இருந்த பை ஒன்றை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறுகையில் அதனை அவதானித்து அவ்வீட்டின் பெண் கூச்சலிடவே அவ்விடத்தை விட்டு தப்பி ஓடியுள்ளான்.
இருந்தபோதிலும் அயலவர்களின் முயற்சியால் பிடிக்கப்பட்ட திருடனை மக்கள் நையப்புடைந்து திருடப்பட்ட பை ஒளித்து வைக்கப்பட்ட இடத்தினை காட்டுமாறு தாக்கினர்.
அடியினை தாங்கமுடியாத திருடன் குறித்த வீட்டிலிருந்து சுமார் 50 மீற்றருக்கு அப்பால் உள்ள வீட்டில் அவ்வீட்டின் உரிமையாளருக்கு தெரியாமலே மறைத்து வைக்கப்பட்ட பையினை எடுத்து கொடுத்துள்ளான். அத்தோடு தன்னுடன் வந்த ஏனையவர்களின் விபரத்தினையும் வழங்கியதோடு திருடிய முறை தொடர்பிலும் பொதுமக்கள் மத்தியில் கூறினான்.
இந்நிலையில் பொதுமக்கள் மத்தியில் குறித்த திருடனை பொலிசாரிடம் ஒப்படைப்பது வீணற்றது எனும் கருத்தும் நிலவிய நிலையில் குறித்த திருடன் இதற்கு முன்னர் திருடிய வீட்டு உரிமையாளர்களும் இணைந்து கள்வனை அடையாளம் காட்டியதுடன் அவர்களது ஆத்திரத்தினையும் வெளிப்படுத்தினர்.
இதன் பின்னராக பொதுமக்கள் கள்வனை ஊர்லமாக கொண்டு சென்று அக்கரைப்பற்று பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதேநேரம்; அநாதை இல்லங்களுக்கு நிதி அறவீடு மற்றும் ஏழைகளுக்கான நிதி அறவீடு என கூறிக்கொண்டு யாருடைய அனுமதியுமின்றி கிராமங்களுக்குள் சந்தேகத்திற்கிடமான நபர்கள் நடமாடுகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.