வி.சுகிர்தகுமார்
இந்த நாட்டில் வாழும் அனைத்து இனமக்களின் இதயங்களை வென்ற ஒரே தலைவர் அனுரகுமார திசாநாயக்கா என அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சருமான வசந்த பியதிஸ்ச தெரிவித்தார்.
அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட நாவற்காடு பிரதேசத்தில் நேற்று(02) மாலை இடம்பெற்ற ; தேசிய மக்கள் சக்தியின் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
ஆலையடிவேம்பு பிரதேச இணைப்பாளரும் வேட்பாளருமான ஆர்.ரதீசன் தலைமையில் வேட்பாளர்கள் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பெருந்திரளான கட்சியின் ஆதரவாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த அவர் ஜனாதிபதி நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ளார். அங்கு வாழும் மக்களின் அன்பையும் ஆதரவையும் அவர் பெற்றுள்ளார். இதன் மூலம் நாட்டின் அனைத்து இடங்களிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை என்றார்.
பல ஊழல் மோசடி மற்றும் குற்றச் செயல்களுடன் ஈடுபட்ட அரசியல்வாதிகள் பலர் இன்று ஜெயிலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மூன்று மாகாண முதல் அமைச்சர்களும் சிறையில் உள்ளனர். அதில் ஒருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்டுள்ளார் அத்தோடு இன்னும் பலர் உள்ளனர் உள்ளே செல்ல. அதில் பல ராஜபக்சக்களும் ஜெயிலுக்கு செல்லவுள்ளனர் என்றார்.
இதேநேரம் தேசிய மக்கள் சக்தி சிங்கள கட்சி என்று சிலர் சொல்லுகின்றனர். அப்படியானால் அதில் கேட்பவர்கள் சிங்களவர்கள் மாத்திரம் இருக்க வேண்டும். உங்கள் பகுதியில் தேர்தலில் நிற்பவர்கள் சிங்களவர் அல்ல. உங்களது மண்ணைச் சேர்ந்த உங்களது சகோதர்களே. ஆகவே தேசிய மக்கள் சக்தி சிங்கள கட்சி அல்ல. தமிழ் முஸ்லிம் சிங்களம் என அனைவருக்குமான கட்சி. அக்கட்சியை வெற்றி பெறச் செய்து உங்களது பிரதேசத்தை நீங்களே அபிவிருத்தி செய்யுங்கள் என்றார்.
நிகழ்வில் பல வேட்பாளர்களும் கருத்துக்களை வெளியிட்டனர்.
Post a Comment
Post a Comment