புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவோம்



 


புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவோம் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் விழிப்புணர்வு நிகழ்வு


நூருல் ஹுதா உமர்


புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுக்கும் நோக்கில் “Cancer Early Detection & Prevention Programme” எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி 2026 மார்ச் 11 ஆம் திகதி இன்று தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீட கேட்போர் அரங்கில் நடைபெற்றது.


தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் நலன்புரி சேவைகள் பிரிவு மற்றும் பல்கலைக்கழக சுகாதார நிலையம் இணைந்து, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சு மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


நிகழ்ச்சியில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் கலந்து கொண்டு நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ. அஹமட் அஷ்ஹர், பல்கலைக்கழக நிர்வாகிகள், சுகாதார அதிகாரிகள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் வரவேற்பு உரையையும் பிரதான உரையையும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன் நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி. திசாநாயக்க உரையாற்றினார். கடந்த ஆண்டில் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் கல்முனை மாவட்டங்களில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான மருத்துவ முகாம்கள் குறித்து அவர் நினைவுபடுத்தினார். அவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சை சேவைகளைப் பெற்றதுடன், மூன்றுசக்கர வண்டிகள், சைக்கிள்கள், வீல் சேர், நடைக்கோல்கள் போன்ற உதவிப் பொருட்களும் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.


மேலும், எதிர்காலத்தில் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூகக் குழுக்களை இலக்காகக் கொண்டு 100க்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை கிழக்கு மாகாணம் முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நிகழ்ச்சியின் போது சுகாதார துறையைச் சேர்ந்த மருத்துவர்கள் பலரும் அறிவியல் விளக்கக் கருத்துரைகளை வழங்கினர். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றாத நோய்கள் பொறுப்பு மருத்துவ அதிகாரி டாக்டர் பௌசாத் விளக்க உரை வழங்கினார்.


அதேபோல் பிராந்திய பல் சிகிச்சை நிபுணர் டாக்டர் யு. ஹபீப் முகம்மட், வாய் புற்றுநோய் தடுப்பு மற்றும் ஆரம்ப அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பாத்திமா ஷாபிரா முகம்மட் வாசீம் மார்பகப் புற்றுநோய் தொடர்பாக விரிவான விளக்க உரை வழங்கினார். இந்த நிகழ்வின் மூலம் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள், தடுப்பு வழிமுறைகள் மற்றும் முன்கூட்டியே கண்டறிதலின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


நிகழ்ச்சியின் இறுதியில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் நலன்புரி சேவைகள் பிரிவின் பணிப்பாளர் கலாநிதி ஏ.என்.எம். முபாறக் நன்றி தெரிவித்தார்.