
இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி முறைகளை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது என்று கோரி நாட்டின் வடமேற்கே உள்ள கரையோரப் பிரதேசங்களைச் சேர்ந்த மீனவர்கள் நீர்கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கொழும்பு-சிலாபம் ரயில்பாதையை மறித்து இவர்கள் நடத்திய போராட்டத்தால் இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
சுமார் 27 ஆயிரம் மீனவர்கள் ஓர் ஆண்டுக்கு பிடிக்கின்ற மீன்களை சில நூறு படகுகள் ஒரே நாளில் பிடித்துச் சென்றுவிடுவதால் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாக ஆர்ப்பாட்டம் நடத்திய மீனவர்கள் கூறுகின்றனர்.
லைலா மற்றும் சுருக்கு வலைகள் போன்ற தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தங்களின் கடல் பகுதிகளில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை அரசாங்கம் தடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரியதாக இலங்கையின் பத்தலங்குண்டு மீனவர் சங்கத்தின் தலைவர் அண்டனி பொன்சேகா தெரிவித்தார்.
கடந்த கால அரசாங்கங்களில் கடற்தொழில் அமைச்சர்கள் பலரிடம் தாங்கள் இது பற்றி முறையிட்டும், இதுவரை உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அண்டனி பொன்சேகா கூறினார்.
