கூகுள் நிறுவனம், அதன் ஆண்ட்ராய்டு கணினி இயங்குதளத்தை (ஆபரெட்டிங் சிஸ்டம்) சந்தைப்படுத்தும் நடைமுறை தொடர்பில் ஏற்பட்டுள்ள மோதலை அடுத்து, அந்த நிறுவனம் மீது ஐரோப்பிய ஒன்றியம் 'போட்டி வணிகத்துக்கு எதிரான செயற்பாடுகளின்' கீழ் குற்றச்சாட்டு பதிவுசெய்துள்ளது.
உலகின் ஸ்மார்ட் ஃபோன்களில் 80 வீதமானவற்றில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் தான் பாவனையில் உள்ளது.
அந்த ஆதிக்கத்தை துஷ்பிரயோகம் செய்யும் விதமாக, கூகுள் நிறுவனம் அதன் சொந்த செயலிகளையும் சேவைகளையும் நிலையான ஏற்பாடுகளாக முன்கூட்டியே உள்ளீடு செய்துவிடுவதாக ஐரோப்பிய ஆணையம் கூறுகின்றது.
உலகின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள், வாடிக்கையாளர்களின் தெரிவுகளை சுருக்கி- புதுமைகளை முடக்குவதன் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டங்களை மீறுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் போட்டி வணிகம் தொடர்பான ஆணையர் மார்கிரெத்தே வெஸ்டாகர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த வழக்கில் கூகுள் நிறுவனம் தோல்வியடையுமானால் பெருமளவு இழப்பீடு செலுத்தவும் அதன் வணிக நடைமுறைகளை மாற்றிக்கொள்ளவும் நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

