ராஜபக்ஷ ரெஜிமென்டை சுற்றி வளைக்க நடவடிக்கை!



இலங்கையின் சமகால நிலைமைகள் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க ரகசிய சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, சாகல ரட்நாயக்க, அகில விராஜ் காரியவசம் மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த சந்திப்பின் போது மோசடியாளர்களை கைது செய்யும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபருக்கு, பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
அவரின் உத்தரவிற்கமைய எதிர்வரும் சனிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில், நல்லாட்சியை முன்னெடுத்து செல்வது பெரும் சிரமமாகும். மஹிந்த தரப்பிற்கு எதிராக கட்டுபடுத்தும் நடவடிக்கையினை மேற்கொள்ளவில்லை என்றால் இந்த வருட இறுதிக்குள் மஹிந்த தரப்பினர் அரசாங்கம் ஒன்று உருவாக்குவதனை யாராலும் தடுக்க முடியாதெனவும், மஹிந்த அரசாங்கம் ஒன்று உருவாகினால் நாங்கள் அடிவாங்கியே உயிரிழக்க நேரிடும் என அமைச்சர் சம்பிக்க தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது சம்பிக்க ரணவக்க ரகசிய கோப்பு ஒன்றை கொண்டு சென்றுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அளவிற்கு சக்தி இல்லை. எதிர்வரும் ஜுலை மாதம் 7ஆம் திகதி மஹிந்த தரப்பினர் பாரிய நடவடிக்கை ஒன்றினை ஆரம்பிக்கவுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக பிரதமரிடம், அமைச்சர் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த இரண்டு வார காலப்பகுதியில் சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவில் இருந்து தனக்கு கிடைத்த தகவல்கள் அவ்வளவு சிறப்பானதாக இல்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சம்பிக்க குறிப்பிட்டுள்ளார்.