மன்னார்- புத்தளம் பயணத்தை மேற்கொண்ட அரச பேருந்து திடீர் பழுது



மன்னாரில் இருந்து இன்று காலை கல்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலைக்கு சொந்தமான பேருந்து பழுதடைந்தமையின் காரணமாக பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்ததாக தெரிவித்துள்ளனர்.
மன்னார் சாலையில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணியளவில் புத்தளம் நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த NB-8795 இலக்கம் கொண்ட பேருந்து இன்று காலை 7 மணியளவில் முருங்கன் பிரதான வீதி நான்காம் கட்டை பிரதான சந்தியில் வைத்து பழுதடைந்துள்ளது.
இதனால் குறித்த பேருந்தில் பயணத்தை தொடர்ந்த மக்கள் நீண்ட நேரம் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த பேருந்தில் ஏற்பட்ட திடீர் பழுது குறித்து பயணி ஒருவர் குறித்த பேருந்தின் சாரதியிடம் கேட்ட போது நேற்று வியாழக்கிழமை இரவு கூட போக்குவரத்து பொறியியல் பிரிவுக்கு குறித்த பேருந்தின் நிலை பற்றி தெரிவித்து கூட உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை.
அவர்களின் அசமந்த போக்கின் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சாரதி தெரிவித்துள்ளார்.
இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் மன்னார் சாலைக்கான போக்குவரத்து பொறியியல் பிரிவின் அசமந்த போக்கினால் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதனால் குறித்த பேருந்தில் பயணம் செய்த நோயாளிகள், அரச, அரச சார்பற்ற திணைக்கள அதிகாரிகள்,பொதுமக்கள் அனைவரும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதோடு, தாம் செல்ல வேண்டிய இடங்களுக்கு நீண்ட தாமதத்தின் பின்பே சென்றுள்ளதாக தெரிவித்தனர்.
எனவே உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி மீண்டும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.