மேத்யூ சூறாவளியால் ஹேய்ட்டியில் 400க்கும் அதிகமான உயிர்கள் பலி



கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஹேய்ட்டியை தாக்கிய மேத்யூ சூறாவளியில் குறைந்தது 400க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
புயலின் முழு தாக்கம் வெளிப்பட இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்று ஐ.நாவின் நிவாரண குழுவை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹேய்ட்டியின் தென்மேற்கு தீபகற்பத்தை மேத்யூ சூறாவளி தாக்கி உள்ளது. அங்குள்ள முக்கிய நகரமான ஜெரீமி கிட்டத்தட்ட அழிந்துள்ளது. மேலும் தெற்கு பகுதியில், பல்லாயிரக்கணக்கான வீடுகளும் அழிந்துள்ளன.
அமெரிக்காவின் ஃபுளோரிடாவை நோக்கி மேத்யூ சூறாவளி
இந்த நிலையில், மேத்யூ சூறாவளி அமெரிக்கா மாகாணமான ஃபுளோரிடாவின் கடற்கரை பகுதியில் நிலை கொண்டுள்ளது.
அது இன்னும் கரையை கடக்கவில்லை. ஃபுளோரிடாவில் பலமான காற்று மற்றும் கடுமையான மழை பெய்து வருகிறது.


அமெரிக்காவின் பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.நான்கு மாகாணங்களில் கடலோரம் வசித்து வரும் மில்லியன் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
50 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மின் இணைப்பை இழந்துள்ளது.