நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு எதிராக



-எம்.எம்.அஹமட் அனாம்-
 மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓட்டமாவடி மற்றும் கிரான் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள முள்ளிவட்டுவான், கல்வளை, அடம்படிவட்டுவான் விவசாயக் கண்டங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களுக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் முறையாக நீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று எதிர்ப்புத் தெரிவித்து, முள்ளிவட்டுவான் தரசேன பகுதியில், நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு எதிராக சுலோகங்களை ஏந்தி, தங்களது எதிர்ப்பை இன்று வெளிப்படுத்தினர். 

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த விவசாயிகள், நீர் குறைவாக உள்ள காலப்பகுதியில், வாகனேரி குளத்துக்கான நீர்ப்பாசனம் வழங்கும் போது, எக்காரணம் கொண்டும் புனானை அணைக்கட்டுக் கதவுகளைத் திறக்கக்கூடாது என்று, பொது சபை தீர்மானம் உள்ளது. அதே போன்று மாதுறுஓயா தீர்மானமும் உள்ளது. இவ்வாறு தீர்மானம் இருக்கும் போது, புனானை அணைக்கட்டுக் கதவுகளைத் திறப்பதன் காரணமாக, வாகனேரிக் குளத்தினை மாத்திரம் நம்பி விவசாயம் செய்யும் 2,000 ஏக்கர் விவசாய நிலங்களைக் கொண்ட விவசாயிகள், மிகவும் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர் என்று குறிப்பிட்டனர். அத்தோடு, இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்துக்கு பல தடவை எழுத்து மூலம் தெரிவித்தும், அவர்கள் தங்களது பிரச்சினைகளை கருத்திற்கொள்ளாது செயற்படுவது, விவசாயிகளான தங்களுக்கு மிகவும் கவலையளிப்பதாகவும் தெரிவித்தனர். -