மாட்டிறைச்சி தடை எதிரொலி: மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்த நடிகர் அரவிந்த் சுவாமி



சென்னை: 
மேஜையின் மீதுள்ள உணவுகளைப் பறிக்காதீர்கள் என மத்திய அரசுக்கு நடிகர் அரவிந்த் சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு கடந்த வாரம் தடை விதித்தது. இதேபோல் இறைச்சிக்காக  எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்கவும் மத்திய அரசு தடை விதித்தது. மேலும்,  இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இதனையடுத்து மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. குறிப்பாக, தமிழகம், கேரளா போன்ற மாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இதை ஏற்க முடியாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் திட்டவட்டமாகக் கூறியுள்ள்ளார். மேலும் இந்தச் சட்டத்துக்கு நான்கு வார இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் மாட்டிறைச்சி தடைக்கு எதிராக நடிகர்களும் குரல் எழுப்பி வருகின்றனர். நடிகர்கள் அரவிந்த் சுவாமி, சித்தார்த் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து நடிகர் சித்தார்த், ' உங்களிடம் அதிகாரம் உள்ளது. அதைப் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றுங்கள். மக்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்' என்று கூறியுள்ளார். 

இதேபோல் நடிகர் அரவிந்த் சாமியும் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகள், அதிகளவு இருக்கும் நாட்டில் இந்தியாவும் ஒன்று. ஆனால், நாம் இன்னும் மேஜையின் மீதுள்ள உணவுகளைப் பறிக்கும் வேலையைத்தான் செய்து வருகிறோம். இதே ஆற்றலை மக்களுக்கு உணவு அளிப்பதிலும் காட்டுங்கள். அதைத்தான் அனைத்து மதங்களும் போதிக்கின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.