புத்தர் சிலையொன்று உடைப்பு



(அப்துல்சலாம் யாசீம்)

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவிற்குற்பட்ட தானியகம பகுதியிலுள்ள புத்தர் சிலையொன்று நேற்றிரவு (21) இனந்தெரியாத சிலரினால் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1989ம் ஆண்டு வைக்கப்பட்ட இந்த புத்தர் சிலையின்   தலை உடைக்கப்பட்டுள்ளதாகவும்  அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது..

தானியகம பகுதியிலுள்ள இந்த புத்தர் சிலை  நீண்டகாலமாக கவனிப்பாரற்ற நிலையில் காணப்பட்டதாகவும் அப்பகுதியில் ஒரிரு நாட்களுக்கு முன்னர் பாடசாலை மாணவர்கள் சுற்றுலா வந்து அப்பகுதியில் உணவுகளை உண்டதாகவும் குரங்குகளின் நடமாட்டம் அதிகளவில்  உள்ளதால்  குரங்குகளின் அட்டகாசத்தால் இந்த சிலை உடைந்திருக்கலாம் எனவும் சீனக்குடா பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.

அத்துடன் திருகோணமலையில் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்களிடையே முரண்பாடுகளை தோற்றுவிக்கும் நோக்கில் வேண்டுமென்றே இச்செயலை  சிலர் செய்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


புத்தர் சிலை உடைக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸ் குழுக்களை அமைத்துள்ளதாகவும் திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.