பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா ​செய்வேன்




எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் தோட்ட தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை 1000 ரூபாவாக அதிகரிக்காவிட்டால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுக தொண்டமான் தெரிவித்துள்ளார். 

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் 30 ஆம் திகதி அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் நினைவு தினமாகும். அன்றைய தினத்திற்குள் இதற்கு தீர்வு கிடைக்காவிட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். 

அத்துடன் தீபாவளிக்கு முற்பணமாக 10000 ரூபா முற்கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

வருகின்ற தீபாவளி பண்டிகை தினம் முதல் மக்களோடு மக்களாக நின்று எந்த வகையான போராட்டங்களையும் செய்ய தான் தயாராகவுள்ளதாகவும் அவர் கூறினார். 

அதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனவும் ஆறுமுகன் தொண்டமான் கேட்டுக்கொண்டுள்ளார். 

அத்துடன் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதா இல்லையா என்பது 30ம் திகதி கிடைக்கும் பதிலை பொறுத்தே தீர்மானிப்பதாகவும் ஆறுமுக தொண்டமான் தெரிவித்துள்ளார்.