பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக மகஜர் கையளிப்பு



பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான 16 நாள்கள் செயற்பாட்டு வாரத்தை முன்னிட்டு, திருகோணமலை மாவட்டப் பெண்கள் வலையமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட தெளிவூட்டல் நிகழ்வொன்று, திருகோணமலை - குளக்கோட்டன் மண்டபத்தில், நேற்று (05) பிற்பகல் 1 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில கடுபிடிய, பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வின் போது, பெண்கள் மீதான வன்முறைகள் தொடர்பான ஒன்பது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை, திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம், திருகோணமலை மாவட்டப் பெண்கள் வலையமைப்பினர் கையளித்தனர்.
இந்நிகழ்வில், திருகோணமலை பிராந்தியச் சிறுவர், பெண்கள் பிரிவுக்குப் பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி யஸ்மின் ராணி, மனித உரிமைகள் அலுவலகப் பிராந்திய இணைப்பாளர் எம்.குகதாசன் உட்பட திருகோணமலை மாவட்டப் பெண்கள் வலையமைப்பைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்து கொண்டனர்.