நாட்டில் கடந்த காலங்களில் இடம்பெற்ற கொலைகள் உள்ளிட்ட குற்றச்சம்பங்களின் பின்னணியை எந்தவொரு அரசும் கண்டுகொள்வதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (செவ்வாய்க்கிழமை) 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன. அதனை முன்னிட்டு பொரளை பொது மயானத்தில் இன்று காலை நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்வில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், நீதி நிலைநாட்டப்படாமல் உள்ளதையிட்டு நாம் கவலையடைகின்றோம்.
தற்போது புதிய அரசு பதவியேற்றுள்ளது. இனிமேலாவது இந்தக் கொலைகள் தொடர்பில் சட்டத்தை நிலைநாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை இவ்வாறான சம்பவங்களின் உண்மைத்தன்மையைக் கண்டுகொள்ள எந்தவொரு அரசும் விரும்புவதில்லை என்றே தெரிகின்றது.
இந்த அரசிலும், இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சிலவேளை இந்த விசாரணைகளை முன்னெடுக்க இடையூறுகள் வரலாம்.
மிக் விமானக் கொள்வனவுக்கும் இந்தக் கொலைக்கும் தொடர்புள்ளது என அனைவருக்கும் தெரியும். ஆனால், இதற்கான சாட்சிகள் இன்னும் கிடைக்கவில்லை. இதனாலேயே இடையூறுகள் ஏற்பட்டிருக்கலாம் என நாம் சந்தேகிக்கின்றோம்” – என்றார்.


Post a Comment
Post a Comment