"ஜெய்ஷ்- இ-முகமது முகாம் மீது இந்தியா தாக்குதல் "




பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து இன்று அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.
11:55: "இன்று அதிகாலை, பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமதின் மிகப்பெரிய பயற்சி முகாமின் மீது இந்தியா தாக்குதல்களை தொடுத்தது." என்று இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார்.
மேலும், "இந்த தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமதை சேர்ந்த பல பயங்கரவாதிகள், மூத்த கமாண்டர்கள், பயிற்சியாளர்கள், ஜிகாதிகள் அழிக்கப்பட்டனர். இந்த முகாம், ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மைத்துனர் உஸ்தாத் கெளரியால் தலைமை வகிக்கப்பட்டது." என்றும் தெரிவித்தார்.
"ஜெய்ஷ் இ முகமது குறித்து பாகிஸ்தானுக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து அதனை மறுத்து வருகிறது. பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் எந்தவித திடமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை." என்றும் அவர் தெரிவித்தார்.
11.40: ஜெய்ஷ் இ முகமது அமைப்பு மேலும் பல தற்கொலை தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்தது என இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்துள்ளார்.
என்ன சொல்கிறது பாகிஸ்தான்?
"பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் தொடுத்து வருவதாக இதற்கு முன்பு கூட இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. அவற்றை நாங்கள் மறுத்துவிட்டோம். இந்நிலையில், உண்மையிலேயே இந்த தாக்குதலை இந்தியா நடத்தியிருக்குமானால், அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய கூற்றுக்கு நேரெதிராக இருக்கும்" என்று பிபிசியிடம் பேசிய இந்தியாவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர் ஆணையாளர் அஷ்ரப் ஜஹாங்கிர் தெரிவித்துள்ளார்.
"ஏனெனில், மூன்று நாட்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, இராஜ்ஜிய முறையை கடைபிடித்து பாகிஸ்தான் விவகாரத்தை இந்தியா அணுகும் என்றும், இருநாட்டு பிரதமர்களும் இணைந்து கல்வியறிவின்மை, வறுமைக்கு எதிராக போராடுவோம் என்று தெரிவித்திருந்தார்" என்று அவர் மேலும் கூறினார்.
பாகிஸ்தானை சேர்ந்த எழுத்தாளரும், பாதுகாப்பு ஆய்வாளருமான ஆயிஷா சித்திக், "இந்தியா நடத்தியதாக கூறப்படும் இந்த தாக்குதல் உண்மையானதாக இருக்குமானால், இது இருநாடுகளுக்கும் மிகவும் முக்கியமான கட்டம். பாலகோட் பகுதியில் இந்த தாக்குதலை இந்தியா நடத்தியதாக கூறப்பட்டாலும், இதில் பாகிஸ்தான் தரப்பில் எவ்வித சேதமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று பாகிஸ்தானின் பாதுகாப்புறை கூறியுள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.
இலங்கை
11:20 - பாலகோட்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின், மன்ஷெரா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் தான் பாலகோட். குன்ஹார் நதிக்கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நகரம், மலைகளை கொண்டது. கோடை காலங்களில் மிகவும் ரம்யமான வானிலையை கொண்ட பகுதியாக இது அறியப்படுகிறது.
2005ஆம் ஆண்டு, ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த பகுதி பெரிய பாதிப்பை சந்தித்தது. ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகிய இந்த நில நடுக்கத்தில், சுமார் 40ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர்.
இந்த பகுதி பழைய சூழலுக்கு திரும்ப பல ஆண்டுகள் ஆகின. இப்பகுதியின் மறு சீரமைப்பிற்காக சௌதி அரேபிய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவிகள் செய்துள்ளது.
சிந்து சமவெளி நாகரீகம் குறித்த ஆய்வுகள் நடைபெறும் இடங்களில் ஒன்றாகவும் பாலகோட் உள்ளது.
11:07 - "பஞ்சாபின் அம்பாலா விமானப்படை முகாமில் இருந்து இன்று அதிகாலை புறப்பட்ட விமானங்கள், சர்வதேச எல்லையை தாண்டாமல் குண்டுகளை வீசியது. மொத்தம் முப்பது நிமிடங்கள் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன, அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்ப வந்தன. சுமார் அதிகாலை மூன்றிலிருந்து மூன்றரை மணி வரை இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது." என்று பிபிசி செய்தியாளர் ஜுகல் புரோஹித்திடம் இந்திய விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
எல்லைப் பகுதியில் உள்ள அனைத்து இந்திய துருப்புகளும் எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், நீண்டகால நடவடிக்கையாக இந்த கண்காணிப்பு இருக்கும் என்றும் விமானப்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய விமானப்படை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியை (லயின் ஆஃப் கண்ட்ரோல்) கடந்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.
"இந்திய விமானப் படை எல்லை கட்டுப்பாட்டு பகுதியை கடக்க முயன்றது. ஆனால், பாகிஸ்தான் துரிதமாக செயல்பட்டுவிட்டது" என பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
"இந்திய விமானப்படை முசாஃபராபாத் பகுதியில் இருந்து ஊடுருவ முயன்றது. ஆனால், பாகிஸ்தான் வெடிகுண்டுகளை வீசி தக்க பதிலடி கொடுத்து இந்திய விமானப் படையை திருப்பி அனுப்பியது" என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானப்படை விமானங்களை துரிதமாக தாக்கியதில் தப்ப முயன்ற இந்திய விமானப் படை விமானங்கள், பாலகோட் பகுதியில் விழுந்தது என அவர் டிவிட்டரில் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
#balakotபடத்தின் காப்புரிமைTWITTER / MAJ GEN ASIF GHAFOOR
இதில் எந்தவித உயிரிழப்புகளும் சேதங்களும் ஏற்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியா, பாகிஸ்தான் இடையேயுள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியை சுற்றி அமைந்துள்ள தீவிரவாதிகளின் முகாம்களை, இன்று அதிகாலை வான் வழி தாக்குதலின் மூலம் இந்திய விமானப்படை முழுவதுமாக அழித்துள்ளது" என்று மத்திய விவசாயம் மற்றும் விசாயிகள் நலத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெக்வாட் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இந்திய விமானப்படையின் விமானிகளை வணங்குவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.