பாகிஸ்தான் பரிதாபம்!தொடரும் அவுஸ்ரேலியாவின் வெற்றிப் பயணம்


பாகிஸ்தான் அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியிலும், அவுஸ்ரேலியா அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
ஏற்கனவே ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய, அவுஸ்ரேலியா அணி தற்போது இந்த வெற்றியின் மூலம், 4-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 277 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக கிளென் மேக்ஸ்வெல் 98 ஓட்டங்ளையும், உஸ்மான் கவாஜா 62 ஓட்டங்களையும், அலெக்ஸ் கெர்ரி 55 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் மொஹமட் ஹஸ்னெய்ன், இமாட் வசிம் மற்றும் யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனைதொடர்ந்து, 278 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பாகிஸ்தான் அணியால், 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 271 ஓட்டங்களை மட்டுமே பெறமுடிந்தது. இதனால் அவுஸ்ரேலியா அணி 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக ஹபீட் அலி 112 ஓட்டங்ளையும், மொஹமட் ரிஸ்வான் 104 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அதிகபட்சமாக நதன் குல்டர் நெய்ல் 3 விக்கெட்டுகளையும், மார்கஸ் ஸ்டொயினிஸ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக அவுஸ்ரேலிய அணி சார்பில் 98 ஓட்டங்ளை பெற்றுக்கொண்ட கிளென் மேக்ஸ்வெல் தெரிவுசெய்யப்பட்டார்.
இரு அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி, நாளை டுபாயில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.