(க.கிஷாந்தன்)
இலங்கை நாட்டிற்கு இந்திய அரசாங்கம் வழங்கியிருக்கின்ற அநேகமான உதவிகள் மீள் செலுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால் ஏனைய நாடுகள் வழங்குகின்ற உதவிகளை மீண்டும் செலுத்த வேண்டும்.எனவே இந்தயிhவின் உதவிகள் எங்களுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதற்கு உதவியாக அமைகின்றது.ஆனால் ஏனைய நாடுகள் வழங்குகின்ற உதவிகள் அவர்களுக்கு வட்டியுடன் மீள செலுத்துகின்ற பொழுது எங்களுடைய பொருளாதாரம் பாதிப்படைகின்றது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தால் கொத்மலை எல்பொட தோட்டத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் (24.03.2019) அன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. இதன்போது கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன்
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை செய்து வருகின்றது.அந்த வகையில் வீடமைப்பு திட்டம் அம்புலன்ஸ் சேவை என்பன மிகவும் குறிப்பிடக்கூடிய விடயங்களாகும். இது தவிர இன்னும் பல உதவிகளையும் செய்து வருகின்றது.இந்த உதவிகளில் அநேகமானவை மீள செலுத்த வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை. இது எமது பொருளாதாரத்திற்கு பாரிய ஒரு உந்து சக்தியாக அமைந்துள்ளது.ஆனால் ஏனைய நாடுகளின் உதவிகள் வட்டியுடன் செலுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.எனவே இந்தியாவின் உதவிகள் மிகவும் வரவேற்கப்படுகின்றது.
நியுசிலாந்து நாட்டின் அண்மையில் ஏற்பட்ட மிகவும் துக்ககரமான சம்பவம் தொடர்பாக அந்த நாட்டினுடைய ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டது.அதனை நமது நாட்டு ஊடகங்களும் பின்பற்ற வேண்டும் என நான் கருதுகின்றேன். இலங்கையில் இருக்கின்ற ஒரு சில பெரும்பான்மை ஊடகங்கள் இன ரீதியில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் வகையிலேயே நடந்து கொள்கின்றது.இதனை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும்.ஊடகங்கள் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இன்று சமூக வளைதளங்கள் ஊடகங்கள் பெரும் பங்களிப்பு செய்கின்றன செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு.எனவே அவையும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டிய தேவை இருக்கின்றது.எங்கள் நாட்டின் தமிழ் ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்வதை நான் பார்க்கின்றேன்.எனவே ஊடகங்கள் செய்திகளை கொண்டு செல்கின்ற பொழுது மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Post a Comment
Post a Comment