நீராடச் சென்றவர் மூழ்கினார்



மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள 39 ம் கொலனி வாய்காலில் நீர் ஓடும் துருசி பகுதியில் நண்பர்களுடன் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர். 

களுவாஞ்சிக்குடி, குருமன்வெளி பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய சந்திரகுமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 6 பேர் கொண்ட நண்பர்கள் நேற்று காலை முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளில் வெல்லாவெளி பிரதேசத்திலுள்ள 39 ம் கொலனியிலுள்ள வாய்காலில் நீராடச் சென்றுள்ளனர். 

இந்த நிலையில் குறித்த வாய்காலில் உள்ள துரிசுப் பகுதியில் உயிரிழந்தவர் முதலில் குதித்த நிலையில் அவர் அந்த சுழியில் மூழ்கி தத்தளித்ததையடத்து அவரை காப்பாற்ற நண்பர் ஒருவர் நீரிழ் குதித்துள்ளார். 

அவரும் நீரிழ் மூழ்கி தத்தளித்ததையடுத்து அவர்கள் இருவரையும் மீட்பதற்காக இன்னொருவர் குதித்துள்ளார். இவர்கள் மூவரும் நீரில் தத்தளித்தபோது ஏனைய நண்பர்கள் இருவரை மீட்டதுடன் முதலில் நீரில் குதித்தவர் காணாமல் போயுள்ளார். 

இதனையடுத்து நீரிழ் மூழ்கி காணாமல் போனவரை நேற்று இரவு வரையும் தேடிய போது அவரை கண்டுபிடிக்காத நிலையில் இன்று காலை குறித்த துருசுப் பகுதிக்கு அருகில் வாய்காலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது 

இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

(மட்டக்களப்பு நிருபர் சரவணன்)