மஹ்ருப் எம்.பி இனது வாகனத்தின் மீது தாக்குதல்



பாறுக் ஷிஹான்  

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் குழுவினர்   மீது முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் நபர்களினால் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சனிக்கிழமை (20) அம்பாறை மாவட்டம் ஒலிவில் துறைமுக அதிகாரசபை  தங்குமிடம் பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்   கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் மற்றும் ஊடகமொன்றிற்கு செவ்வி வழங்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் உள்ளிட்ட குழுவினர் கலந்த கொண்டிருந்தனர்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் தொடர்பாக மேற்குறித்த ஊடக  நேரலை செவ்வியில் கருத்து தெரிவிக்கப்பட்டதாக கூறி பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிமின் ஆதரவாளர்கள்     என வந்தவர்களினால்  திடீர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் போது அப்பகுதியில் டயர்கள் எரிக்கப்பட்டு எதிர்ப்பு காட்டப்பட்டதுடன்  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் காயங்கள் எதுவும் இன்றி தப்பியதுடன் அவரது வாகனம் பகுதியளவில் சேதமடைந்துள்ளது

சம்பவ இடத்திற்கு கடற்படையினர் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் போது அக்கரைப்பற்று பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதுடன் அப்பகுதியில் சிறிது பதற்றம் நிலவுகின்றது.

மேற்படி கூட்டங்கள் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கு எதிர்வரும் வாரங்களில் கட்சியின் தலைவர் றிசாத் பதியுதீன்  வருகை தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.

பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஃறூப் இத்தாக்குதல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் 

நிந்தவூர் பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் முஸ்லீம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் முக்கியஸ்தர்கள் எமது கட்சியில் உத்தியோக பூர்வமாக இணைந்து கொண்டனர்.இதில் பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசீமின் நெருங்கிய நபர் ஒருவரும் எம்முடன் இணைந்து இரவு இராபோசனமும் வழங்கினார்.இந்த விடயத்தை என்னிடம் செவ்வி மேற்கொண்ட ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்திருந்தேன்.அது நேரலையாகவே இருந்தது.இதனை பார்த்துக்கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் நான் தங்கி நின்ற துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான தங்குமிடத்திற்கு வந்து அராஜகத்தில் ஈடுபட்டனர்.
எனது வாகனத்தையும் கற்களால் அடித்த கண்ணாடிகளை நொறுக்கினர் .இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவித்துள்ளேன் என கூறினார்;.