நினைவுப் படிகம் திரை நீக்கம்


பாறுக் ஷிஹான்

கல்முனை மண்ணின் வரலாறுகளை  அதன் தொன்மைகளை ஆவணப்படுத்தும் முயற்சியின் அங்கமாக கல்முனை முகைதீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்  கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்கா நிருவாகத்தின் ஒத்துழைப்புடன் கல்முனை மரபுரிமை ஆய்வு வட்டம் இணைந்து   வரலாற்றுச் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல்  தொடர்பான  அறிமுகம் கொண்ட நினைவுப் படிகம் திரை நீக்கம் செய்யும் நிகழ்வு  சனிக்கிழமை (20) இரவு 8.00 மணிக்கு பள்ளிவாசல் முன்றலில்  இடம்பெற்றது.

 கல்முனை அஹ்லுஸ் சுன்னத்வல் ஜமாத் உலமாசபை தலைவர் மெளவி அல்ஹாஜ்  பீ. எம்.ஏ.ஜலில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  கல்முனை அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் ,உலமாக்கள் இமரபுரிமை ஆய்வு வட்ட உறுப்பினர்கள் புத்திஜீவிகள்,நலன்விரும்பிக்கள் ,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் தொடர்பான நினைவுப் படிகம் திரை நீக்கம் செய்யும் நிகழ்வில் ஆரம்பத்தில் சூறத்துல் பாத்திகா ஓதப்பட்டு பின்னர் பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள சின்ன மினரா மற்றும் பெரிய மினரா வரலாறு தொடர்பாக அங்கு வந்திருந்த அதிதிகள் விளக்கமளித்தனர்.

தொடர்ந்து வரவேற்பு உரை மற்றும் துஆ பிராத்தனை நிகழ்வை மௌலவி ரீ.ஆர் நௌபர் அமீன் மேற்கொண்டிருந்தார்.
அடுத்து மரபுரிமை ஆய்வு வட்ட அறிமுக உரையை எழுத்தாளர் ஏ.எம் பறக்கத்துல்லாஹ்வும் விசேட உரையினை பேராதனை பல்கலைக்கழக மெய்யியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் முபிஸாத் அபூபக்கரும் பிரதம உரையினை வைத்தியர் எஸ்.எம்.ஏ அஸீஸூம் இறுதியாக நன்றியுரையினை முகையதீன் ஜூம்மா பெரிய பள்ளிவாசலின் உப செயலாளரும் மரபுரிமை ஆய்வு வட்டத்தின் உறுப்பினருமான ஏ.எம் ஹக்கீம் உரையாற்றியதுடன் நிகழ்வு ஸலவாத்துடன் நிறைவடைந்தது.

இந்த நிகழ்வில்  ஏராளமான மக்கள் நாட்டின் பல பக்கங்களிலும் இருந்து கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கிழக்கு மாகாணத்தின் கல்முனை மாநகரில் பழமை வாய்ந்த  வரலாறு கொண்ட  புராதனம் மிக்கதாய் இவ்  கடற்கரைப் பள்ளிவாசல் காணப்படுகின்றமை  குறிப்பிடத்தக்கது.