"பாலியல் லஞ்சம் கேட்கின்றனர் சில நுண்கடன் நிறுவனத்தினர்"


“நுண்கடன் பற்றிய தெளிவு மக்களிடம் இல்லாத நிலையில் அந்த நிறுவனத்தினர் சிலர் கையெழுத்துக்களை வாங்கிப் பணத்தைக் கொடுக்கின்றனர். பின்னர் அந்தப் பணத்தை அடாத்தான முறையில் மீளப் பெறுகின்றனர். பாலியல் லஞ்சம் கோரும் செற்பாடுகளும் நடைபெறுகின்றன. எனவே, நுண்நிதிக்கடன் தொடர்பாக மாவட்ட மட்டத்தில் பொதுவான தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்” என்று கரவெட்டிப் பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்தார்.
யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதிலேயே அவர் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தாவது:-
“கரவெட்டிப் பிரதேசத்தில் நுண்நிதி நிறுவனங்களால 16 குடும்பங்கள் விவாகரத்துப் பெற்றுள்ளன. இரண்டு குடும்பங்களில் தாய், தந்தை ஆகியவர்கள் தலைமறைவாகியதால் அவர்களுடைய பிள்ளைகள் பாட்டி, அல்லது உறவினர்களுடன் வாழ்கின்றனர். உயிர் மாய்ப்புக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
இந்த விடயம் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் பொதுவான தீர்மானம் ஒன்று எடுத்தால்தான் சிறந்தது. அண்மையில் நுண்நிதி நிறுவனங்களை அழைத்து கலந்துரையாடினோம். இந்த நிதி வழங்கல், கடன்வழங்கல் தொடர்பாக எந்தவொரு தெளிவும் மக்களுக்கு வழங்கப்படவில்லை.
எனவே, கிராம அலுவலகரின் அனுமதியின்றி எந்தக் கடன்களையும் வழங்கவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளோம்.
தவறான கருத்துக்களை முன்வைத்து, பொய்யான காரணங்களைக் கூறித்தான் கடன்களை எடுக்கின்றார்கள்.
இந்த விடயங்கள் சீர்செய்யப்படவில்லை என்றால் நிச்சயமாக இந்த கடன்களைப் பெறும் குடும்பங்களுக்கிடையில் பாதிப்புக்கள் ஏற்படும்.
இப்போது 16 குடும்பங்கள் விவாகரத்துப் பெற்றுள்ளன. அவர்கள் அனைவரும் 32 வயதுக்குட்பட்டவர்கள். இவை எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் இந்த நுண்நிதிதான். நுண்நிதியை வழங்குவதில் தவறில்லை. ஆனால், அதற்குச் சரியான விளக்கம், அல்லது ஆவணம், தெளிவுகள் வழங்கப்படவேண்டும்.
கையெழுத்துக்களை வாங்கிவிட்டு காசைக் கொடுத்துவிட்டுப்போகின்றார்கள். சிலர் அடாத்தான முறையில் கடனைப் பெறுவதும், கடனுக்குப் பதிலாக பாலியல் இலஞ்சங்களைக் கோருவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இது தொடர்பாகத் தீர்க்கமான முடிவுகளை எட்டவேண்டும்” – என்றார்.
அங்கு கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாண மாநகர முதல்வர் இ.ஆனோல்ட் தெரிவித்ததாவது:-
“வங்கிகளில் கடன் பெறச் சென்றால் இன்னுமோர் வங்கியில் கடன் பெற்றிருப்பின் இரண்டாவது கடனுக்கு அனுமதி மறுக்கப்படும். இதனால் அதிக நெருக்கடியில் இருந்து பயனாளி தப்பிக்கின்றார். ஆனால், நுண்நிதி நிறுவனங்களோ ஒருவர் ஏற்கனவே இரு இடத்தில் கடன் பெற்று 3ஆவது தடவை கடன் கோரினாலும் வழங்குகின்றனர். அதை எவ்வாறு மீளச் செலுத்துவார் என்பது தொடர்பில் ஆராய்வது கிடையாது.
இந்த நிறுவனங்கள் தமது பணத்தை எப்படியும் அறவிடுவோம், அதனால் எமக்குரிய இலாபம் கிடைக்கும் என்பதில் மட்டுமே குறியாக உள்ளனர். இதனால் ஒரு பயனாளி ஓர் நிறுவனத்தில் கடன் பெற்ற நிலையில் வேறு நிறுவனத்திலும் பெறுவாராயின், அதை அந்த நிறுவனம் கோர முடியாது என்ற நிலமையை உருவாக்க வேண்டும்” – என்றார்.