கனேடிய உயர்ஸ்தானிக பிரதிநிதிகளுடன் NFGG குழுவினர் சந்திப்பு.



-NFGG ஊடகப்பிரிவு-
இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகளுக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று 03.07.2019 இன்று காலை, மட்டக்களப்பில் இடம்பெற்றது.இச்சந்திப்பில் இலங்கைக்கான கனேடிய தூதரகத்தின் அரசியல் துறைப்பொறுப்பாளர் மேரி ஜோஸ் அவர்களுடன், இந்தியாவிற்கான கனேடிய தூதவராலயத்தின்
முதன்நிலை செயலாளர் பீட்டர் ப(B)ன்டீ அடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர். NFGG சார்பில் அதன் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், ஸ்தாபக உறுப்பினர்கள், காத்தான்குடி நகரசபை உறுப்பினர்கள், மகளிர் பிரிவு பிரதிநிதிகள் உள்ளடங்கிய குழுவினர் கலந்து கொண்டிருந்தனர்.
கடந்த 21ம் திகதிய தாக்குதல்களுக்குப்
பின்னரான சமகால நிலவரங்களை ஆராயும் நோக்கில் மட்டக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த கனேடிய உயர்ஸ்தானிகராலய பிரதிநிதிகள், இன்றைய தினம் பல்வேறு தரப்பினர்களுடனான கலந்துரையாடல்களையும் மேற்கொண்டிருந்தனர். அந்த வகையில் அரசியல்கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பாகவே NFGGஉடனான சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது 21ம் திகதிக்கு பின்னரான பிராந்திய மற்றும் தேசிய அரசியல் நிலவரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இந்நாட்டு முஸ்லிம்கள் எதிர்நோக்கி வருகின்ற கலாச்சார ,பொருளாதார, உரிமை ரீதியான சவால்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இந்நாட்டில் சட்டத்தின் முன் அனைத்து பிரஜைகளும் சமம் என்கின்ற நிலை உறுதிப்படுத்தப் படவேண்டும் எனவும்,நாட்டின் சட்ட ஒழுங்கும், பாதுகாப்பும் இன, மத பேதங்கள் கடந்து அனைவருக்கும் பொதுவானதாகவும், நீதியை நிலைநாட்டுவதாகவும், சுயாதீனமாகவும் இயங்க வேண்டும் எனவும், அதுவே இந்நாட்டிலுள்ள அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்க்க சிறந்த வழி எனவும் NFGG பிரதிநிதிகளினால் வலியுறுத்தப்பட்டது. இச்சந்திப்பு மிகவும் பிரயோசனமாக அமைந்ததாகவும் கலந்துரையாடப்பட்ட
விடயங்களை தாங்கள் நிச்சயம் கவனத்தில் கொண்டு, அதனை அரசுக்கு பரிந்துரைப்பதாகவும், கனேடிய பிரதிநிதிகள் இதன்போது உறுதியளித்தனர்.