மூக்குடைபட்டார், முன்னாள் முதலமைச்சர்,தமது செயலுக்கு எதிரான தீரப்பினால்


வடமாகாண சபையின் மீன்பிடி, போக்குவரத்து அமைச்சராகக் கடமையாற்றிய பீ.டெனீஸ்வரனை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதற்கு, வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் எடுத்த தீர்மானமானது அரசமைப்புக்கு முரணானது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(திங்கட்கிழமை) இவ்வாறு அறிவித்துள்ளது.
நீதிபதிகளான மஹிந்த சமயவர்தன, பிரியந்த பெர்ணான்டோ ஆகிய நீதிபதிகள் குழாமினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, டெனீஸ்வரனுக்கு பதிலாக, முன்னாள் முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட ஏனைய அமைச்சர்கள் நியமனமும் சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இவ்வாறான நியமனங்களை வழங்குவதற்கு, முதலமைச்சருக்கு அதிகாரம் இல்லை எனவும்  வழக்கின் செலவுகள் அனைத்தையும் முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனே வழங்கவேண்டும் என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.