ஓலைத் தொடுவாய் பகுதியில் கைக் குண்டு மீட்பு




மன்னார்- தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத் தொடுவாய் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வீதி அபிவிருத்திக்கு என கொட்டப்பட்ட கிரவல் மண்ணில் இருந்து சந்தேகத்திற்கு இடமான கைக்குண்டு ஒன்று நேற்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீதி அமைப்பதற்காக செட்டிகுளம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டு, ஓலைத்தொடுவாய் பகுதியில் கொட்டப்பட்ட குறித்த கிரவல் வகை மண்ணில் இருந்தே குறித்த கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கிரவல் மண்ணை நேற்று மாலை பரவும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் குறித்த கைக்குண்டு காணப்பட்டதை அவதானித்துள்ளனர்.

உடனடியாக மன்னார் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் காணப்பட்ட கைக்குண்டு அடையாளப்படுத்தப்பட்டதுடன் , குறித்த பகுதிக்கு தற்காலிக பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் லெம்பட்)