சாக்‌ஷி டுவிட்டரில் விளக்கம்,அதெல்லாம் வதந்திகள்


இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் என்னால் மறக்க முடியாத போட்டி என்று குறிப்பிட்டு டோனியுடன் இணைந்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2016 உலகக்கோப்பை காலிறுதியில் விளையாடிய ஆட்டத்தை நினைவு கூர்ந்து இருந்தார். அத்துடன் ‘ஸ்பெசல் நைட்’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.

விராட் கோலியின் டுவீட்டை வைத்து, டோனி ஓய்வு பெறலாம் என்ற செய்தி தீயாக பரவியது. அவர் இரவு 7 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்றும் செய்தி வெளியானது.
இதற்கிடையில் தென்ஆப்பிரிக்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்படும்போது, தேர்வுக்குழு தலைவரான எம்எஸ்கே பிரசாத், அப்படி எந்த தகவலும் இல்லை என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில் டோனியின் மனைவி  சாக்‌ஷி தனது டுவிட்டர் பக்கத்தில் அதெல்லாம் வதந்திகள் என குறிப்பிட்டுள்ளார். இதனால் டோனி ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.