வரட்சியால் வரண்டது ஆறு,வெளியேறுகிறது முதலைகள்!


அம்பாறை மாவட்டத்தில்  கடந்த சில தினங்களாக நிலவுகின்ற  சீரற்ற காலநிலை   காரணமாக கடும் வெப்பநிலையை அடுத்து கிட்டங்கி ஆறு பகுதியில்    மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் மீன் வகைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அத்துடன் முதலைகளின் நடமாட்டத்தினால்  மீன்களின் பிடிபாடு பெருமளவில் குறைவடைந்துள்ளதாக மீன் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

 இதற்கு காரணம் சடுதியாக ஏற்பட்ட  சீரற்ற காலநிலை மற்றும்  காற்றழுத்தம் என்பன    மீன்களின் பிடிபாடு வெகுவாகக் குறைவடைந்தமைக்கான காரணமென அப்பகுதி  மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவ்வாறு  காற்றுக் காரணமாகக் கடல் கொந்தளிப்பு அடிக்கடி  அதிகரித்துக் காணப்படுகின்றமை கடும் வரட்சியுடனான காலநிலை நிலவுகின்றமை ஆகிய காரணங்களே மீன்களின் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இப்பகுதியில்   மாரி கால பருவ மழை  இன்மையினால்  அங்குள்ள  ஆறு  குளம் ஆகியவற்றில் அதிகளவான  மீன் இனங்கள்  பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது குறைவடைந்துள்ளது.

இதில்  கோல்டன் செப்பலி கிலோ 500 ரூபாவாகவும்  கணையான் கிலோ 1000 ருபாவாகவும்   கொய் ஒரு கிலோ 400 ஆகவும்  கொடுவா ஒரு கிலோ 1000 ஆகவும்  கெண்டை கிலோ ரூபா 400 ஆகவும்  விரால் கிலோ 800 ஆகவும்    இம் மீன் வகைகள்  அதிகளவான விலையில் விற்பனை செய்யப்படுவதுடன் இதர மீன்களான கெண்டை(கெளுறு) பனையான் மீசைக்காரன் ஆகியவை ஓரளவு  குறைந்த விலையில் விற்பனையாகின்றன.