நபர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்


(க.கிஷாந்தன்)
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிலானி தோட்டத்தில் 30.09.2019 அன்று மதியம் 54 வயதுடைய நபர் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார்.
இந்த நிலையில் 30.09.2019 அன்று இரவு வரை குறித்த நபர் குறித்து எந்த தகவலும் கிடைக்கப்பெறவில்லை என்று, மீட்பு பணியில் ஈடுப்பட்டுள்ள பொலிஸாரும், பிரதேசவாசிகளும் தெரிவித்துள்ளனர்.
30.09.2019 அன்று மதியம் பெய்த கடும் மழையின் காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஒயா பெருக்கெடுத்ததன் காரணமாக பொகவந்தலாவ நகரபகுதிக்கு சென்று மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்த வேளையில் குறித்த நபர் இவ்வாறு நீரில் அகப்பட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொகவந்தலாவ கிலானி தோட்டபகுதியை சேர்ந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான பெருமாள் மனோகரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சம்பவ இடத்திற்கு கடற்படையினர் வரவழைக்கப்படவுள்ளதாக தெரிவித்த பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.