என்னோடு விவாதம் செய்ய மன்சூருக்கு தகுதி இல்லை


பாறுக் ஷிஹான்


என்னோடு  விவாதம் செய்ய பாராளுன்ற உறுப்பினர்  மன்சூருக்கு தகுதி இல்லை என ஜனாதிபதி வேட்பாளர்  எம்.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர்  ஹிஸ்புல்லாஹ்வினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை(18) மாலை 8  மணியளவில் அக்கரைப்பற்று கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார்  மண்டபம் ஒன்றில் இடம்பெற்ற வேளை ஊடகவியலாளர் ஒருவர்  பகிரங்க விவாதம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்   மன்சூர்  அழைத்தமை பற்றி கேட்டபோது மேற்கண்டவாறு கூறினார்.



அவர் மேலும் தெரிவித்ததாவது



றவூப் ஹக்கீம் அவர்கள் ஒரு சமூகத்தின் தலைவர். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர். மேலும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்.நானும் ஒரு முன்னாள் ஆளுநர். பல அமைச்சுக்களை கடந்த காலம் தம்வசம் வைத்திருந்தவன்.எனது அரசியல் 30 வருடங்கள் பழைமையானது.நான் கலாநிதியும் கூட.ஆனால் எனது தகுதிக்கு ஏற்றவருடன் தான் விவாதம் என்னால் மேற்கொள்ள முடியும்.



தற்போது என்னை பகிரங்க விவாதத்திற்கு அழைத்தவருக்கு என்ன தகுதி உள்ளது(சிரிக்கிறார்).எனவே எனக்கு தகுதியானவர்  எவருடனும்  விவாதம் செய்ய நான் தயார்.தேவையற்ற தகுதியற்றவர்களுடன் விவாதம் செய்து எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என குறிப்பிட்டார்.