வெடி பொருட்கள் வைத்திருந்த முன்னாள் இராணுவ வீரர் கைது


(க.கிஷாந்தன்)

பூண்டுலோயா பொலிஸ் பொறுப்பதிகாரி ரஞ்சன பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் 03.11.2019 அன்று மாலை பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியில் நடத்திய சோதனை நடவடிக்கையின் போது ரி – 56 ரக துப்பாக்கியின் தோட்டாக்கள், வெற்றுத் தோட்டாக்கள், மற்றும் ஏனைய துப்பாக்கிகளின் தோட்டாக்கள் மற்றும் கஞ்சா என்பனவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரி.-56 ரக தோட்டாக்கள் 31, மேலும் வெற்றுத் தோட்டாக்கள் 8, கஞ்சா 13 கிராம் என்பன இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் இராணுவ வீரர் எனவும், இவர் 6 வருடங்களிற்கு முன்பு இராணுவ கடமையிலிருந்து வெளியேறியுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபரை எல்பொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பிரதேசத்தில் நபர் ஒருவர் சட்டவிரோதமாக தோட்டாக்கள் வைத்திருப்பதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நீண்டகாலமாக மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் இந்த சந்தேக நபர் தேடுதலின்போது கைது செய்யப்பட்டுள்ளார்.