இறந்தவரின் இதயத்தை வேறொரு உடலில் துடிக்க வைத்த மருத்துவர்கள்!




அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில் மருத்துவர்கள், இறந்தவரின் இதயத்தை வேறு ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளனர்.


உடல் உறுப்பு தானத்தின் மூலம் தினமும் பலர் புத்துயிர் பெறுகின்றனர். சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புகளை உயிருடன் இருப்பவர்களும் தானமளிக்க முடியும். இதயம், கண், நுரையீரல் போன்ற உறுப்புகள் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து பெறப்படுகின்றது. குறிப்பாக, இதயம் மூளைச்சாவு அடைந்தவரிடமிருந்து மட்டும்தான் எடுக்கப்படுவது வழக்கமாக உள்ளது. காரணம் மூளைச்சாவு அடைந்தவரின் இதயம் இயங்கிக்கொண்டேதான் இருக்கும்.

முதன்முதலாக 1967-ல் தென்அமெரிக்காவில் இதய மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது பரவலான ஒன்றாக உள்ளது.


ஆனாலும், நோயாளிக்குப் பொருத்துவதற்கு மாற்று உறுப்புகள் கிடைப்பதற்கு தட்டுப்பாடு நீடித்துக்கொண்டே இருக்கிறது. உடலுறுப்பு தானத்தால் பெறப்படும் சில உறுப்புகள்கூட பாதிப்படைந்து பயன்பாட்டுக்கு உகந்தகாக இருப்பதில்லை. சில உறுப்புகள் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றன.

ஒருவரின் உயிர் பிரிந்ததும் இதயத் தசை நார்கள் செயலிழந்து இதயம் உபயோகம் இல்லாத ஒன்றாக ஆகிவிடுகிறது. ஆக்ஸிஜன் குறைபாட்டால் திசுக்கள் செயலிழக்க ஆரம்பித்துவிடும். அதனால் மூளைச் செயலிழப்பு ஏற்பட்டவர்களிடமிருந்து மட்டுமே இதயம் தானமாகப் பெறப்படுகிறது. தற்போது அமெரிக்காவில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தில், இறந்தவரின் இதயம் வேறு ஒருவருக்கு வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது.


உடல் உறுப்பு தானம்! - தொடர்ந்து நான்காவது முறையாகத் தமிழகம் முதலிடம்
பல்லாயிரக்கணக்கானோருக்கு மறுவாழ்வு அளிக்கும் இந்த முறை 'warm perfusion' என்று அழைக்கப்படுகிறது. இம்முறையில் உயிரிழந்தவரின் உடலில் இருந்து இதயம் வெளியே எடுக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு அதில் பல்வேறு குழாய்கள் பொருத்தப்பட்டு இதயம் துடிப்பதற்குத் தேவையான ரத்தம், ஆக்ஸிஜன், எலக்ட்ரோலைட்ஸ் ஆகியவை செலுத்தப்பட்டு துடிக்க வைக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் அந்த இதயத்தை நோயாளி ஒருவருக்கு மாற்றிப் பொருத்தியுள்ளனர் மருத்துவர்கள்.


இந்தப் புதிய தொழில்நுட்பத்தினால் இதயத்துக்கான தட்டுப்பாடு குறையும், அதனால் ஏற்படும் மரணங்களும் தவிர்க்கப்படும் என்று மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இது அமெரிக்காவில் நடைபெறுவது இதுவே முதல்முறை என்றாலும் இங்கிலாந்தில் 2015-ம் ஆண்டிலிருந்து இந்த முறையைப் பயன்படுத்தி இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நடைமுறை உள்ளது.