சிறுநீலாசேனையில் துப்பாக்கிச் சூடு; குடும்பஸ்தர் பலி



உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை பொலிசார் மீட்டுள்ளனர்

இச்சம்பவம் நேற்று (26) இரவு மன்னார்  உயிலங்குளம் பொலிஸ் நிலைய பிரிவில் உள்ள சிறுநீலாசேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம்பற்றி தெரியவருவதாவது,

மன்னார், உயிலங்குளம் பொலிஸ் பிரிவிலுள்ள சிறுநீலாசேனை பகுதியில் ஒருவர் வீட்டுக்கு முன்புள்ள வீதியில் இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

மன்னார் சிறுநீலாசேனையில் துப்பாக்கிச் சூடு; குடும்பஸ்தர் பலி-Shooting-Family Man-Dead-Mannar

இதைத் தொடர்ந்து விசேட தடயவியல் நிபுண பொலிஸார் (SOCO) சம்பவ இடத்திற்கு வந்து விசாரனைகளை மேற்கொண்டனர்.

இறந்த நபர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 41 வயதான, மாரி தர்மராசா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


இம்மரணம் தொடர்பாக மரண விசாரணையை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் இம்மானுவேல் கயஸ் பல்டானோ மேற்கொண்டார்.

இறந்த நபர் குடும்பத்திலிருந்து விலகி தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில், அவர் தனிமையில்  வாழ்ந்து வந்த வீட்டின் முன்னுள்ள வீதியிலேயே சுடப்பட்ட காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுடப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும், இவரின் சடலத்துக்கு அருகாமையில் ஒரு சிறிய கத்தியொன்றும் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன் கட்டுத் துவக்குகிற்கு பயன்படுத்தும் வெடிபொருட்களின் சான்றுகளும் காணப்பட்டுள்ளமையால், இவர் கட்டுதுவக்கினால் இலக்காகியே மரணித்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

இவரின் மரண விசாரனையை மேற்கொண்ட பதில் நீதவான் இ. கயஸ் பல்டானோ, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்காக மன்னார் பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று பிரேத பரிசோதனையை மேற்கொண்டபின் உறவினரிடம் சடலத்தை கையளிக்கும்படி பொலிசாருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

இம்மரணம் தொடர்பாக பொலிசார் தீவிர விசாரனைகளில் ஈடுபட்டுள்ளனர்.